இங்க வந்துடு...நானும் வந்துடறேன்!...நாம ரெண்டு பேரும் எங்க கடைல ராத்திரி முழுசும் சந்தோஷமா இருந்திட்டுக் காலைல நேரத்துல எந்திரிச்சுப் போயிடுவோம்!...எப்படி என் ஐடியா?”
“உன் ஐடியாவைக் கொண்டு போய் குப்பைத் தொட்டில போடு!..”சொல்லிவிட்டு நாணத்தோடு சிரித்தாள் அந்த பாக்கியம்.
அந்த நாணத்தையும் அவள் பேச்சிலிருந்த வலுவற்ற மறுப்பையும் புரிந்து கொண்ட திவாகர்
“த பாரு பாக்கியம்!...நானும் ஒன்றரை வருஷமா உன்னைக் கண்ணுல பார்த்துப் பார்த்தே ஐஸ்கிரீமா உருகிட்டிருக்கேன்!...இதுக்கொரு முடிவு வர வேண்டாமா?” கெஞ்சினான். தன் கெஞ்சல் அவளை மசிய வைத்து விடும் என்பது அவனது திடமான நம்பிக்கை.
“உங்களை மாதிரி ஆம்பளையா இருந்தா...“அம்மா...நான் இன்னிக்கு ராத்திரி என் ஃபிரெண்ட் வீட்டுல தங்கிக்கறேன்!”னு சொல்லிட்டு வந்திடலாம்!...ஆனா ஒரு பொண்ணால எப்படி?” அவள் லேசாய் வசப்பட ஆரம்பித்தாள்.
“அதொண்ணும் பெரிய விஷயமில்லை!...“காம்ப்ளக்ஸ்ல பக்கத்துக் கடைல வேலை பார்க்கற மாதேஸ்வரிங்கற ஒருத்திக்குக் கல்யாணம்...நான்தான் அவளுக்கு கூட இருந்து ராத்திரி ரிசப்ஷனுக்கு மேக்கப் போட்டு விடணும்!...அதேமாதிரி காலை முகூர்த்தத்துக்கும் நான்தான் மணமகள் மேக்கப் போட்டு விடணும்!...காலைல முகூர்த்தம் நாலரை டூ அஞ்சரை என்பதினால என்னால வீட்டுக்கு வந்திட்டுத் திரும்பிப் போக முடியாது!...ஸோ...நான் அங்கியே மண்டபத்துல மணமகள் ரூமிலேயே தங்கிக்குவேன்!”ன்னு ஒரு புருடா அடிச்சு விடு....சரின்னுடுவாங்க!” திவாகர் சொல்லித் தர
யோசித்த பாக்கியம், “ம்ம்...இந்த ஐடியா கொஞ்சம் சாத்தியமாத்தான் தெரியுது!...” என்று சொல்லி விட்டு “டேய் பையா...உன்னை நம்பித்தான் வர்றேன்!...சேதாரம் பண்ணிடாதடா!” என்றாள்.
“நீ என் வருங்கால தாரம்!...உனக்கெப்படி ஆகும் சேதாரம்?” டி.ராஜேந்தர் பாணியில் சொல்லி விட்டு அவன் சிரிக்க
“அதெல்லாம் சரி!...இங்கதான் ராத்திரி நேரங்கள்ல பேய் நடமாட்டமிருக்கே?...அப்புறம் எப்படி நாம இங்க வர்றது? ” அச்சத்துடன் கேட்டாள் பாக்கியம்.
“அடிப்போடி இவளே!...நீயுமா நம்பறே அந்தப் பேய்க் களேபரத்தை?...எனக்கென்னமோ அது இந்தக் காம்ப்ளக்ஸ் ஓனரோட எதிரிங்க யாரோ செய்யுற வேலைன்னு தோணுது!” என்றான் திவாகர்.
“அதுல அவங்களுக்கு என்ன லாபம்?”