தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 17 - முகில் தினகரன்
இரவு பத்து மணி வாக்கில் ஆட்டோவிலிருந்து இறங்கும் ரவீந்தரைப் பார்த்ததும் ஓடி வந்த வத்சலா. “இப்ப எப்படி இருக்குங்க?...” என்று கேட்டபடியே அவனை மேலும் கீழுமாய் ஆராய்ந்தாள்.
ஆட்டோ புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த கஸ்தூரி அய்யா, ரவீந்தர் வந்து விட்டதைக் கண்டு, வீட்டிற்குள் திரும்பிச் சென்று அவன் வீட்டுச் சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்து விட்டார்.
மூவரும் உள்ளே வந்ததும் ரவீந்தரை நாற்காலியில் அமர வைத்து விட்டு, தானும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் கஸ்தூரி அய்யா. “இப்ப எப்படி தம்பி இருக்கு?” கேட்டார்.
“பெரிசா ஒண்ணும் காயம் இல்லைங்க அய்யா...எல்லாம் சிராய்ப்புக் காயங்கள்தான்!...டாக்டர்...“அட்மிட் ஆகவேண்டிய அவசியமில்லை!”ன்னுட்டார்... அதனாலதான் இன்னிக்கே திரும்பி வந்திட்டோம்” என்றான் ரவீந்தர்.
கதவோரம் நின்று அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்ற வத்சலாவின் கண்களில் ஈரம் தெரிந்தது. சன்னக் குரலில், “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்..நானும் சுதாகர்ஜியும் கோயமுத்தூர்ல கிளம்பும் போதே சாப்பிட்டுட்டோம்” என்றான்.
“சூடா ஏதாச்சும் குடிக்கறீங்களா?”
“இல்லை...வேண்டாம்” என்று புன்னகையுடன் மறுத்தான் ரவீந்தர்.
“அப்ப...ஒண்ணு செய்யுங்க தம்பி...நல்லா படுத்துத் தூங்கி ரெஸ்ட் எடுங்க...எதுவானாலும் நாளைக்குப் பேசிக்குவோம்” என்று சொல்லியபடி கஸ்தூரி அய்யா எழ, வத்சலா ரவீந்தரையே பார்த்துக் கொண்டு வெளியேறினாள்.
*****
காலையின் கண் விழித்ததும் மொபைலை எடுத்து டைம் பார்த்தான் ரவீந்தர். 7.30.
மெல்ல எழுந்து வாசற் கதவைத் திறந்தவன், எதிர் வாசற்படியில் வத்சலா இவன் வீட்டுக் கதவையே பார்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு நெற்றி சுருக்கினான். இவனைக் கண்டதும் எழுந்து வந்தவள், “காஃபி ரெடியாயிருக்கு” என்றாள்.
அவன் “வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்க, “தயவு செய்து வேண்டாம்!னு மட்டும் சொல்லிடாதீங்க” என்றவளின் குரல் கரகரத்திருந்தது.
அதைக் கேட்டு ரவீந்தர் அமைதியாய் நிற்க, “ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று ஒரு டம்ளரில் காஃபி கொண்டு வந்து தந்தாள்.
வாங்கிக் கொண்டவன், “அப்பா?” கேட்டான்.
“மார்க்கெட்டுக்குப் போயிருக்கார்...காலை டிபன் கொண்டு வந்து தர்றேன் இங்கியே