சாப்பிட்டுட்டுப் போங்க!...மெஸ்ஸுக்கெல்லாம் போய் அலைய வேண்டாம்” என்று கண்டிப்புடன் அவள் சொல்ல,
“உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?”
“ப்ச்” என்று அவனை முறைப்பாய்ப் பார்த்து விட்டு, அவன் குடித்து முடித்த டம்ளரை வாங்கி கொண்டு வீட்டிற்குள் திரும்பி நடந்தாள்.
ரவீந்தர் குளித்து முடித்து, உள் அறையில் பேண்ட் மாட்டிக் கொண்டிருந்த போது, கதவு நாசூக்காகத் தட்டப்படும் சத்தம் கேட்க, “டிரஸ் மாத்திட்டிருக்கேன்” இங்கிருந்தே கத்தலாய்ச் சொன்னான்.
“ஹால்ல டிபன் வெச்சிருக்கேன்” சொல்லி விட்டு வத்சலா சென்றதும்,
மேல் சட்டை அணியாமல் கேஷுவலாய் ஹாலுக்கு வந்தவன், கதவருகே வத்சலா நின்று கொண்டிருக்க, “அய்யோ...” என்று சொல்லிக் கொண்டு மீண்டும் உள் அறைக்குச் சென்று சட்டையணிந்து கொண்டு வந்தான்.
அவள் போய் விட்டிருந்தாள்.
சிரித்தவாறே சாப்பிட்டு முடித்தவன், பிளேட்டையும் சின்னச் சின்ன பாத்திரங்களையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்து குழாயடியில் கழுவப் போக, “அதை அப்படியே வெச்சிட்டுப் போங்க சார்!...நான் கழுவிக்கறேன்” என்றாள் வத்சலா.
“இல்லை பரவாயில்லை...கழுவிடறேன்”
“ப்ச்...சொன்னாக் கேளுங்க சார்” மிரட்டலாய் அவள் சொல்ல,
“ஓ.கே....ஓ.கே..” என்றபடி பாத்திரங்களை குழாயடியில் வைத்து விட்டு நகர்ந்தான்.
****
அலுவலகத்திற்குள் நுழைந்து தன் மேஜையில் அமர்ந்தவன் எதிரில் நிழலாட தலையைத் தூக்கிப் பார்த்தான். கோகிலா.
“என்ன கவிஞரே?...நேத்திக்கு திடீர்னு ஆள் காணாமப் போயிட்டீங்க?...” கேட்டாள்.
“ஓ...இவங்களுக்கெல்லாம் அந்த நிகழ்வு பற்றி எதுவும் தெரியாதல்ல?...அப்படின்னா சரி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், “அது வந்து திடீர்னு கோயமுத்தூர் வரைக்கு போக வேண்டியதாயிடுச்சு...அதான் கிளம்பிப் போயிட்டேன்”
“நான் பயந்திட்டேன்” என்றாள் கோகிலா.
“ஏன்?...பயப்பட என்ன இருக்கு?”
“ஒருவேளை...உடம்பு கிடம்பு சரியில்லையோ?ன்னு பயந்திட்டேன்”
அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கடுப்புடன் பார்த்தபடி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்