தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 21 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
அர்ச்சகர் ரம்யாவிடம் குங்குமத்தைத் தர ஒரு நிமிடம் நிதானித்த காரணம், அவள் பெண் என்பதால் மீனாட்சிக்குச் சூட்டப்பட்ட மாலையில் இருந்த மலர் ஒன்றையும் எடுத்தத் தரவே என்பதைக் கண்டதும், மலரை மிகுந்த பக்தியுடன் கையில் வாங்கிக் கொண்டவள், சன்னதியில் இருந்து வெளிவரவும், தினேஷ் தன் கைகளில் இருந்த குங்குமத்தைத் தன் விரலில் தொட்டு அவள் நெற்றியில் இட்டான். அன்னையின் மாலையில் இருந்து கொடுத்த மலரை அவள் தலையில் அவனே சூட்டினான்.அந்த வினாடியில், தனது பிறப்பின் பயனையே அடைந்தவள் போலானாள் ரம்யா. அதற்கப்புறம் அவளின் கால்கள் தரையில் துளியும் இல்லை. வாழ்நாளில் இதுவரை இல்லாத ஓர் உணர்வு. எடையே சிறிதும் இல்லாமல் புவிஈர்ப்பில்லா இடத்தில் மிதப்பதைப் போல் மிதந்தாள். சில நேரம் பறந்தாள். அவள் நடந்த உணர்வே அவள் கால்களில் இல்லை. அவன் கரங்களைக் கோர்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனாலும் தயக்கம். கோவிலின் பிரகாரத்தில் சற்று நேரம் அமர்ந்து பேசிவிட்டு, வெளியில் வந்தார்கள். ஒரு முறை அவன் விரல்கள் கோர்த்துக் கொண்டு சிறிது தூரம் நடக்கலாம் என்று நினைத்துப் பிடித்தாள். மதிய உணவை சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்ற ஓட்டல் வரையில் சற்றும் அவள் கரங்களைப் பிடித்த பிடியை விடவில்லை தினேஷ். சாப்பிட்டு முடித்ததும் ஊர் திரும்ப மறுபடியும் பேருந்தில் ஏறினார்கள். இம்முறை இருவரிடையே வார்த்தைகள் ஒன்றும் இல்லை, கண்கள் மட்டும் பேசிக் கொண்டேயிருந்தன. இந்தப் பயணம் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருந்தால்தான் என்னவென்று தோன்றியது இருவருக்கும். கல்லூரியின் அடுத்த நிறுத்தம் வரை சென்று, ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். “ரம்யா! நீ இன்னிக்கு சந்தோஷமா இருக்கியான்னு தினேஷ் கேட்கவும், ரொம்பவே என்றாள். இதே மாதிரி உன்னை வாழ்நாள் முழுதும் சந்தோஷமாப் பார்த்துக்கணும். இதான் என் ஆசை!” என தினேஷ் சொல்ல, நீ நிச்சயமா பார்த்துப்படா என்றாள். சரி! நீ இப்போ கல்லூரிக்குள்ள போ, நான் இன்னிக்கு லீவ் தான் அப்ளை பண்ணப்போறேன். நான் காலேஜ்க்கு வரல,இப்போ நீயும் நானும் ஒண்ணா சேர்ந்து உள்ளே போனால், பிரெண்ட்ஸ் எல்லாம் ஈசியா கண்டுபிடிச்சிருவாங்க. நாம போனதைப் பத்தி யார்கிட்டயும் எதுவும் பேசிக்காத, இப்போ தான் காலேஜ்க்கு வர்ற மாதிரி காட்டிக்கோ. பஸ்ல வந்ததில காற்றில் உன் தலை முடியெல்லாம் கலைஞ்சிருச்சு. உன்கிட்ட சீப்பு இருக்கா. இல்லியே என ரம்யா சொல்லவும், இரு! என்னோடது தர்றேன்! என்று தனது பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தந்தான். உன் ஹேண்ட்பேக்ல வச்சுக்கோ. முதலில் ரெஸ்ட்ரூம் போய் ரொம்ப தூரம் ட்ராவெல் பண்ணிட்டு வந்த சாயல் உன் முகத்தில் இல்லாம, வீட்டில இருந்து கிளம்பி வந்த மாதிரி பிரெஷ் ஆகிடு. நல்லா ஐடியா கொடுக்குற தினேஷ். ரம்யா என்று அழைத்தவனை, என்னவென்று கண்ணாலே