அவங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
எப்படித் தெரியும் அவங்களுக்கு,நீயே சொன்னியா ,
திருட்டுத்தனமாக போன் பேசறது, மெனக்கெட்டு கிப்ட் பண்றதுன்னு எல்லாத்தையும் பார்த்துட்டுத் தானே இருந்தாங்க. நான் வேற நீ கொடுத்த சாக்லேட் பேப்பர் எல்லாத்தையும் படுக்கைக்குக் கீழயே பதுக்கி வச்சிருந்தேன். கிளீன் பண்றப்போ பார்த்துட்டு ஏண்டா சாக்லேட்டைத் தின்னுட்டு பேப்பரைக் கொண்டு போய் போடாமல் இப்படிக் குப்பையாக்கி வச்சிருக்கன்னு கேட்டாங்க.
எனக்கு ரொம்ப முக்கியமானவங்க கொடுத்ததுன்னு சொன்னேன். பேர் என்னன்னு கேட்டாங்க. ரம்யான்னு சொன்னேன். சிரிச்சுட்டே போயிட்டாங்க.
திட்டவேயில்ல?
திட்டல!
ஏண்டா திட்டல? எங்கம்மாவா இருந்தால் அவ்ளோதான்!
எனக்குப் பிடிச்ச எல்லாமே ஆட்டோமேட்டிக்கா எங்க அம்மாக்கும் புடிக்கும். இப்போ எனக்கு உன்னைப் புடிச்சதால் டீபால்டா நீ அவங்களுக்கும் பிடிச்சவளா ஆயிட்ட! அதனால் உன்கிட்ட பேசறதுக்கு என்னைத் திட்ட மாட்டாங்க!
மிகவும் யதார்த்தமாக நடந்து கொள்ளும் தினேஷின் அம்மாவைப் பார்க்காமலேயே ரம்யாவுக்குப் பிடித்துப் போனது. என்றாவது அவர்களை நேரில சந்திக்க வேண்டுமென்று ஆசை கொண்டாள். டேடாபேஸ் லேபில் பவர் பெயிலியர் காரணமாக இரண்டு வாரங்கள் வகுப்புகள் நடக்கவில்லை. எனவே அவர்களின் டேடாபேஸ் சார், இரண்டு பேட்ச்களையும் ஒன்றாகச் சேர்ந்து அந்த ப்ரோக்ராம்களை முடிக்கச் சொல்லியிருந்தார். இருப்பத்தி ஐந்து பேர் இருந்தால் தான் அந்த லேப் அமைதியாக செயல்பட முடியும். மொத்த வகுப்பும் கூடியதால் சலசலவென்று சத்தமாக இருந்தது. ரம்யாவும் ராகதேவியும் எப்போதும் போல சேர்ந்து கொண்டனர். சீக்கிரமே அந்த ப்ரோக்ராம்களை முடித்து விட, மெல்லிய குரலில் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். உன் வருங்கால கணவன் பெயரை உன் கைரேகையில் பார்க்க முடியும் தெரியுமா என்ற தேவியிடம், எப்படி என்று மிகுந்த ஆவலுடன் கேட்டாள் ரம்யா.
தொடர்வேன்
Next episode will be published on 28th Mar. This series is updated weekly on Sunday mornings.