இதே தான் தேவியும் சொன்னா என்றவளிடம்
யாராக இருந்தாலும் இப்படித் தான் சொல்வாங்க ! நான்லாம் இப்படி எதாச்சும் கிறுக்குத்தனமான வேலை பண்ணிட்டு இருக்கேனா? என்றவனை ஏறெடுத்துப் பார்த்தவள்
டியர் ஹஸ்பன்ட், அன்புக் கணவா, நீ மட்டும் இப்படி பைத்தியமா ஒன்னும் பண்ணலயா? என்றாள். இல்லையே என்றவனைக் குறுக்கிட்டு, முதன்முதலில் லெட்டர் எப்படி எழுதிக் கொடுத்தீங்க, உங்க ரத்தத்துல ஐ லவ் யூனு.. நினைவிருக்கா ?
ம். அப்போ எதோ வேகத்துல எழுதிட்டேன் என்றவனுக்கு, நானும் அதே வேகத்துல தான் எழுதிட்டேன்னு அவள் பதில் சொல்ல, ரம்யாவை அடிக்கக் கை ஓங்கியவன். உன்னை அடிக்கலாம் போலத் தோணுது, ஆனால் என்னால உன்னை அடிக்கவும் முடியாது. எதாச்சும் ஆயின்ட்மென்ட் க்ரீம் போட்டு சீக்கிரம் இந்த தீக்காயத்தைச் சரி பண்ணு என்று கிளம்பினான்.
கண்மணியுடன் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த ரம்யா, டிபார்ட்மென்ட் கோர் பேப்பர்களில் அதிக கவனம் செலுத்த, தேவியுடன் [பெரும்பாலான நேரங்களில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். இதனால் கண்மணியுடன் செலவிடும் நேரம் குறைந்து கொண்டிருந்தது. மேலும், ரம்யாவும் தேவிக்கு தான் வாக்குக் கொடுத்ததுபோல் அவளுடனேயே படிக்க ஆரம்பிக்க, கண்மணிக்கும் ரம்யாவிற்கும் இடைவெளி அதிகமாகி, அவர்களிருவரும் சந்திப்பதும் குறைந்து, ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சுவார்த்தையும் கூட நின்று போனது. அவள் பேசட்டும் என்று ரம்யாவும். ரம்யா பேசட்டும் என்று கண்மணியும் காத்திருக்க, இருவரும் ஒருவரிடம் பேச மற்றொருவர் கொஞ்சம் கூட முயற்சியே எடுக்கவில்லை. பெண்களின் சண்டைகளுக்குள் கார்த்திக்கும், தினேஷும் தலையிடவும் இல்லை. அன்றைய தினம் ரம்யாவிற்கு ஏனோ ஓர் உறுத்தல். மாதாந்திர விலக்கு நேரங்களில் அவளுக்குக் கடுமையான வயிற்றுவலி வரும், அதைப் போல ஒரு வலி. எதற்கும் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டால், கறைபட்டால் தெரிந்து விடும் என்ற பயமிருக்காது என்றெண்ணி கருப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாள். மதிய நேரம், வழக்கம் போல தன்னைக் காண தினேஷ் வருவான் என்று நினைத்தபடியே வகுப்பில் தனியே அமர்ந்திருந்தாள். கண்மணி, தேவி, இன்னும் சில தோழிகள் ஒன்றாக நுழைந்தனர். அவளின் அருகில் வந்ததும் கண்மணி, ரம்யா என்றாவறே பெருங்குரலில் அழத் தொடங்கினாள்.
தொடர்வேன்
Next episode will be published on 4th Apr. This series is updated weekly on Sunday mornings.