ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணன் தேவகிக்கு சொந்தமா அல்லது யசோதைக்கு சொந்தமா?
கர்ணன் குந்திக்கு சொந்தமா அல்லது ராதே தாய்க்கு சொந்தமா? என்னும் விடைக்கான கேள்விகள் போல இன்று மீண்டும் ஒரு பாசமிகு விடையில்லா வினா.
“தனுஷ்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். நாங்க குடும்பமா பழனிக்கு போனோம்.” என அம்மா தொடங்கினார்.
” சாமி தரிசனம் முடிச்சதும் வெளியில ஹோட்டல்ல சாப்பிட போனோம் . . அங்கதான் உன்ன முதன்முதலா பார்த்தேன். நீ ஹோட்டல் வாசல்ல உட்கார்ந்திருந்த ஏழெட்டு மாச குழந்தை நீ . . பக்கத்துல ஒரு பொண்ணு பூவித்துட்டு இருந்துச்சி”
“நாங்க சாப்பிட்டு முடிச்சு வெளிய வந்தா அப்பவும் நீயிருக்க .. கீழ இருந்து மண்ணெடுத்து வாயில போட போனே . . ”ஏம்மா உன் குழந்தை வாயில மண்ணு போடுது பாருனு நான் சொன்னேன்”
இருபது வருடங்களுக்கு முன் நடந்தவை கண்முன் நிழலாடியது.
“இது என் புள்ள இல்லம்மா. . . யாருன்னு எனக்கு தெரியாது . . ரொம்ப நேரமா இங்க இருக்கு” என்றாள் அந்த பூவிற்கும் பெண்.
“உன் குழந்தை இல்லையா? அப்ப யாரோடது?” சாந்தி சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்க. அப்போது குழந்தை சாந்தியை பார்த்து தன் பொக்கை வாய் தெரிய புன்னகைத்தது. சாந்தி அந்த மோகன புன்னகையில் மெய் மறந்தாள்.
“நான் காலை எட்டு மணிக்கு கடை போட்டேன். அப்பவே இருந்துச்சு. பாவம் பசிக்குமேனு அப்பப்ப நான்தான் பால் வாங்கிக் கொடுத்தேன்” பூவிற்கும் பெண் கூற
“சரி சரி நேரம் ஆச்சு கிளம்பலாம்” தாத்தா அவசரப்படுத்த
மனமே இல்லாமல் சாந்தி காரில் ஏறினாள். அவள் முகத்தை வைத்தே மனதை புரிந்துக் கொண்ட கணவன் “யாரோ குழந்தை அதுக்காக நீ ஏன் கவலைப் படுற” எனக் கேட்டார்.
சாந்தி காரில் ஏறியதும் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது. சாந்திக்கு மனதில் சொல்ல முடியாத குழைவு ஏற்பட . . சாந்தி வேகமாக இறங்கி ஓடிச் சென்று குழந்தையை தூக்கினாள்.
குழந்தையை தூக்கியதும் அழுகை நின்று மெல்ல விசும்பியது குழந்தை. தலையை அவள் தோளில் சாய்த்து பின் தன் சின்ன கரத்தால் முடிந்தவரை சாந்தியின் கழுத்தை கட்டிக் கொண்டது.
“பாப்பா அழகா இருக்கும்மா . . வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா?” என சிறுவன் தனுஷ் மிருதவான குழந்தையின் பாதத்தை தடவியபடி கேட்டான். தனுஷ் செயலால் குழந்தை தன் காலை சிலுப்பிக் கொண்டு கீழே எட்டிப் பார்த்தது. பின் தனுஷை உர்ரென்று நோக்கியது.