”தேங்க்ஸ்” என்றான். எத்தனையோ பேச நினைத்தவனுக்கு வார்த்தைகள் வராமல் சதி செய்தது. மனம் தாத்தா மற்றும் சஞ்சய் பற்றிய நினைவுகளில் முழ்கியிருந்தது.
”இன்னிக்கு ஈவ்னிங் உங்களுக்காக ரெஸ்டாரண்ட்ல வெயிட் பண்ணிட்டிருப்பன்” என்றாள்.
”பிருந்தாவை காண செல்லலாமா? வேண்டாமா? என மனம் குழம்பி இறுதியாக செல்ல திட்டமிட்டான். ”சொன்ன டைமுக்கு வந்திடுவேன் பிருந்தா . . பை கொஞ்சம் வேலை இருக்கு” என போனை துண்டித்தான்.
தன் அறைக்குச் சென்று தயாராக முற்பட்டவனை சஞ்சயின் குரல் இழுத்துப் பிடித்தது. ”என் அம்மா அப்பா யாரு? என்னை எங்கிருந்து எடுத்துட்டு வந்தீங்க?” என அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான். எப்பொழுதும் இளமை துள்ளல் கலாட்டா வம்பு இழுப்பது என முகம் நிறைந்த புன்னகையுடன் இருப்பவன் முகத்தில் வாட்டம் காணப்பட்டது.
”சஞ்சய் காலேஜ்க்கு ரெடி ஆகலயா? போய் குளி . .” என தனுஷ் அண்ண்ணுக்கே உரிய உரிமையில் கட்டளையிட்டான்.
”தனுஷ் நீயாவது சொல்லு” என சஞ்சய் தந்தையிடம் கேட்டவற்றை மீண்டும் கேட்டான். எப்பொழுதும் பிக் பிரோ என அழைப்பவன் இன்று தனுஷ் என அழைத்ததை தனுஷ் கவனிக்க தவறவில்லை.
” நீ எங்களவிட்டு போயிடுவியா சஞ்சய் . .” அப்பா தழுதழுத்த குரலில் கேட்டார்.
”இல்லபா சத்தியமா போக மாட்டேன். ஆனா என்னை தூக்கி எரியுற அளவு என்ன பாவம் செஞ்சேன் தெரியணும்” ஏக்கத்தோடு கூறினான்.
”நான் சொல்றேன் சஞ்சய்” என அவன் அம்மாவே வந்துவிட்டார். இதை அம்மாவிடம் கேட்கும் திராணி இல்லாமல்தான் அப்பாவை கேட்டான். அம்மாவின் பாசம் அத்தகையது. என்றுமே சஞ்சைக்கும் தனுஷ்க்கும் வேறுபாடு பார்க்காதவர் . . பார்க்க தெரியாதவர்.
”சாந்தி . . சும்மா இரு” என கணவர் அடக்க முயன்றவர் முகத்தை கண்டு ”சஞ்சய் ஆசைப்பட்ட எதுவும் இப்பவரை கொடுக்காம இருந்ததில்ல . . இப்ப புது அம்மா கேட்கிறான் . . சாரி பழைய அம்மா கேட்கிறான் . . போகட்டும். தடுக்க எனக்கு உரிமை இல்ல” என்றார் விரக்தியின் உச்சத்தில். வடிந்த கண்ணீரைக் கூட துடைக்க இயலாமல்.
சஞ்சய் ”அம்மா ப்ளீஸ் அப்படி சொல்லாதிங்க . . நான் உங்களவிட்டு எங்கயும் போக மாட்டேன்” என அணைத்துக் கொண்டான்.
ஆனால் சாந்திக்கு அவன் வார்த்தையில் நம்பிக்கை இல்லை. அவனை தன்னருகில் அமர்த்திக்கொண்டார். அவன் அவர் மடி மீது படுத்துக் கொண்டான். இந்த கோலத்தைக் காணவே தனுஷிற்க்கு சங்கடமாய் இருந்தது. ஒவ்வொருவர் மனதிலும் பாசப் போராட்டம்.