தவிர்த்து விட்டு, சற்றுத் தள்ளியிருந்த அகலமான கிணற்றை நோக்கிச் செல்ல, அதிர்ச்சியானான். “ஆஹா..இதுக ரெண்டு தற்கொலை பண்ணிக்க வந்திருக்குதுக போலிருக்கே?...இப்ப என்ன பண்றது?”
அவன் நினைத்தது போலவே, அவர்களிருவரும் கிணற்றுச் சுவற்றின் மீது ஏறி நின்று, ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு, குதிக்கத் தயாராக...
பாய்ந்தோடினான் ரவீந்தர்.
“ஏய்...ஏய்ய்ய்ய்ய்...நில்லுங்க...நில்லுங்க” கத்தினான்.
அவன் கத்தலைக் கேட்டுத் திரும்பிய அந்த ஆண், ரவீந்தர் புது மனிதனாயிருக்க, கோபத்தோடு கிணற்றுச் சுவற்றிலிருந்து இறங்கி, “யார்ரா நீ?...எங்களை எதுக்குடா தடுக்கறே?” கேட்டான்.
“நான்...யார்?ன்னு அப்புறம் சொல்றேன்...முதல்ல நீங்க ரெண்டு பேரும் அந்தக் கிணற்றை விட்டு இந்தப் பக்கம் வாங்க” என்றான்.
“இங்க பாரு...இது எங்க சொந்த விஷயம்...இதுல தலையிட உனக்கு உரிமையில்லை...போயிடு இந்த இடத்தை விட்டு....” ஆட்காட்டி விரலைக் காட்டி எச்சரித்தான் அவன்.
“சாகப் போற ஒரு சக மனிதனைத் தடுக்க உரிமை வேண்டியதில்லை!...உண்மையான மனித நேயம் இருந்தால் போதும்” என்றான் ரவீந்தர்.
“மனித நேயம்?” என்று சொல்லி விட்டுச் சிரித்த அந்த ஆண், “அப்படி ஒண்ணு இந்த ஊர்ல இல்லாததினால்தான் நாங்க சாவைத் தேடி இங்க வந்திருக்கோம்!...ஏன்னா எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதி அப்படி” என்றான்.
“சார்...உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்..அந்த விதிகளை வீழ்த்தும் அளவிற்கான வழிகளும் நிச்சயம் எழுதப்பட்டிருக்கும்!...அதனால மனசு தளராம என் கிட்ட உங்க பிரச்சினையைச் சொல்லுங்க...நான் உங்களுக்கு அந்த வழியைக் காட்டறேன்” என்றான் ரவீந்தர்.
அந்த இளைஞனுடனிருந்த பெண் சில நிமிடங்கள் ரவீந்தரையே கூர்ந்து பார்த்து விட்டு, “ராஜேஸ்...நாம சாவு முடிவைக் கொஞ்சம் தள்ளிப் போட்டுட்டு...இவர்கிட்டே நம்ம பிரச்சினையைச் சொல்வோம்...இதைக் கடைசி முயற்சியாய் செய்து பார்ப்போம்” என்றாள்.
அவளது அந்தப் பேச்சிலேயே அப்பெண்ணுக்கு சாவதில் அவ்வளவு இஷ்டமில்லை, என்பதைப் புரிந்து கொண்ட ரவீந்தர், “தங்கச்சி சொல்றதுதான் சரி!...வாழ்க்கையை சுலபமாக்குவதும்...மாறாய் அதைக் குழப்பி போராட்டமாக்குவதும்...நம்ம கையில்தான் இருக்கு!...அதனால நம்பிக்கையோட என் கூட வாங்க!...என் வீடு பக்கத்துலதான் இருக்கு!...அங்க நான் மட்டும்தான் இருக்கேன்...பேசுவோம்!...நாளைய விடியலை உங்களுக்கொரு நல்ல விடியலாக்கிக் காட்டுவது, என் பொறுப்பு” என்றான்.