தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 23 - முகில் தினகரன்
வெளியூரிலிருந்து வந்து சேர்ந்த சுரேஷ், நடந்தவைகளை விசாரித்துத் தெரிந்து கொண்ட பின், உடனடியாக காவல்துறையில் புகார் ஒன்றைப் பதிவு செய்தான். அவனால் விஷயத்தை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. அதே நேரம், தன் யூகத்தை ஒரு உறுதியென சொல்ல அவனால் முடியவில்லை.
“உங்களுக்கு தொழில் ரீதியா யாராவது எதிரிக இருக்காங்களா?...அப்படி யார் மீதாவது சந்தேகம் இருக்கின்றதா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்ட போது கூட, சுரேஷால் உடனடியாக அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
“சார்...அந்தப் பொண்ணுக்கு நினைவு வந்த பிறகு...அது கூட கொஞ்சம் பேசினாப் போதும்...என்னால் இது யாரோட வேலைன்னு சொல்ல முடியும்!...அது வரைக்கும் வெய்ட் பண்ணுங்க சார்!” என்றான்.
“உங்களுக்கு குடும்ப பகை...முன் விரோதம்...னு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?” என்று அதே கேள்வியை இன்ஸ்பெக்டர் தேவநாதனிடம் கேட்ட போது, தேவநாதன் எதையோ சொல்ல வந்து, பிறகு நிறுத்திக் கொண்டார்.
அதைத் தன் போலீஸ் பார்வையால் கண்டு பிடித்து விட்ட இன்ஸ்பெக்டர், “என்ன மிஸ்டர்...எதையோ சொல்ல வர்ற மாதிரி வந்தீங்க...அப்புறம் “பொசுக்”குன்னு அப்படியே நிறுத்திட்டீங்க!..என்ன சமாச்சாரம்...தைரியமாச் சொல்லுங்க!” என்று கேட்க,
பார்வதி முந்திக் கொண்டு வந்து, முன்பொருமுறை சுலோச்சனாவைப் பெண் பார்க்க வந்து, அர்ச்சனாவைக் கட்டிக்க கோரிக்கை வைத்த அந்த பேங்க் மாப்பிள்ளையைப் பற்றியும், அவனை அர்ச்சனா நேரடியாய் பேங்கிற்கே போய் வாங்கு..வாங்கென்று வாங்கியதையும், மொத்தமாய் இன்ஸ்பெக்டரிடம் போட்டுடைத்தாள்.
“வெரி குட்!...வெரி குட்!...உண்மையிலேயே இது ஒரு நல்ல...முக்கியமான தகவல்!” என்ற இன்ஸ்பெக்டர், “ஓ.கே!...அந்தப் பொண்ணு கொஞ்சம் குணமாகும் வரை வெய்ட் பண்ணுவோம்!” என்று சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.
மறுநாள் காலை,
மெல்லக் கண் விழித்து, சிரமப்பட்டுப் பேசிய அர்ச்சனா, முதலில் அழைத்தது சுரேஷைத்தான்.
எங்கிருந்தோ பறந்தடித்துக் கொண்டு வந்த சுரேஷிடம், “அ...அந்த துருவா ஆட்கள்தான்!”என்று அவள் லேசாய் எடுத்துக் கொடுத்ததுமே,
“சரிதான்!...இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்!...இது போதும் அர்ச்சனா...இதை வெச்சே அவனுகளை ஒரு வழி பண்ணிடறேன்!” கொதித்தான் சுரேஷ்.
“சு...ரேஷ்.. நீ...நீங்க கொஞ்சம் ஜா...ஜாக்கிரதையா இருங்க!”