உன்னோட மனசை சங்கடப்படுத்திடுமே!...”
“அப்பா...வெளியுலகக் கேலிகளுக்கு ஒரு மனுஷன் முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சான்னா...அப்புறம் அவன் வெளியவே வர முடியாது!...ஒண்ணு...அதுகளுக்கு செவி சாய்க்காமப் போயிடணும்!...இல்லையா?...கேலி செய்தவங்களை இரண்டில் ஒண்ணு பார்த்திடணும்!...இதில் நான் ரெண்டாவது ரகம்!...ஸோ...டோண்ட் வொரி!” என்றாள் அர்ச்சனா.
இந்த நிலையிலும் அவள் தன்னம்பிக்கை சற்றும் குறையாமல் பேசும் மகளை ஆச்சரியமாக...அதே நேரம் பெருமிதத்தோடு பார்த்தனர் அவளைப் பெற்றவர்கள்.
“ஆக...நான் மீண்டும் பழைய அர்ச்சனாவா மாறப் போறேன்!...வாழ்க்கைன்னா இந்த மாதிரியான இடையூறுகள் வரத்தான் செய்யும்!...அதையெல்லாம் போகிற போக்கில் நாம் உதறித் தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்!...”
அர்ச்சனா சொல்வதைச் செய்பவள், செய்வதை மட்டுமே சொல்பவள், என்பதை நிரூபிக்கும் விதமாய் மறுநாள் காலை அலுவலகம் சென்றாள்.
****
அர்ச்சனாவின் வரவிற்குப் பின் “சுரேஷ் அசோஸியேட்ஸ்” மீண்டும் புத்துணர்வு பெற்று, ஏறு முகத்தில் “ஜிவ்”வென்று ஏற,
சம்பூர்ணம் அர்ச்சனாவை மருமகளாக்கிக் கொள்ளும் பேச்சை மறுபடியும் துவக்கினாள்.
அர்ச்சனாவின் பெற்றோர்களும் அந்தப் பேச்சை வழி மொழிய,
“அப்பா...என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கணும்னு என்னை விட அதிகமா ஆசைப்படறவங்க என்னைப் பெத்தவங்களான நீங்கதான்!...அத்னால உங்க விருப்பம் அதுதான் என்றால் எனக்கும் சம்மதமே!”
சுரேஷை மறுக்க, எந்தவொரு காரணமும் இல்லாத காரணத்தால், முழு மனதுடன் தன் சம்மதத்தைச் சொன்னாள் அர்ச்சனா. நகரின் இருதயப் பகுதியிலிருந்த ஒரு பெரிய திருமண மண்டபத்தில் அர்ச்சனா-சுரேஷ் திருமணம், வெகு விமரிசையாக நடந்தேற,
உண்மையான “அன்பில் உள்ளதுதான் வாழ்க்கை” என்பதை உணர்ந்த அந்த உள்ளங்கள் இரண்டும் ஒளி மயமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு கை கோர்த்தன.
மனித வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள்தான் உண்மையான அன்பைக் கண்டுபிடிக்க உதவும் அளவுகோலாக திகழ்கின்றன என்று வள்ளுவன் சொன்னது சரிதானே?
(முற்றும்)