தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 24 - முகில் தினகரன்
ஆறு மாதங்களுக்குப் பிறகு
“இங்க பாரு ப்ரியா..கடைசியாக் கேட்கறேன்..இன்னிக்கு என் கூட சினிமாக்கு வருவியா..வர மாட்டியா?” பக்கத்தில் நிற்பவர்கள் தன்னை விநோதமாகப் பார்ப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவனாய் செல் போனில் கத்திப் பேசினான் வினோத்.
“சரி...சரி…கத்தாதே..வர்றேன்” மறுமுனையில் ப்ரியாவின் ஒப்புதல் கிடைத்ததும்
“த பாரு..சரியா அஞ்சரை மணிக்கு சாமுண்டி தியேட்டருக்கு வந்துடு” என்றான்
“அய்யோ..அங்க நான் வர மாட்டேன்பா..அந்தத் தியேட்டர்ல பேய் உலாத்தறதா சொல்றாங்க!...ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்த தியேட்டருக்குப் பக்கத்துல காம்ப்ளக்ஸ்ல குவியலாய் பொணம் எடுத்தாங்கல்ல?...அதப் பேய்கள் பூராவும் இப்ப இந்த தியேட்டர்லதான் சங்கமமாம்!”
“ஏய்..அதெல்லாம் கப்ஸா..நம்ம மாதிரி ஜோடிக மத்தவங்க தொந்தரவு இல்லாம ஜாலியா இருக்கணும்கறதுக்காக அப்படியொரு வதந்தியப் பரப்பி விட்டிருக்காங்க ..நீ பயப்படாம கரெக்ட் டைமுக்கு வந்துடு..என்ன?”
“நான் வர்றது இருக்கட்டும்..நீ கரெக்ட் டயத்துக்கு வந்துடுவியா?” ப்ரியா அவனைத் திருப்பிக் கேட்க
“ம்ம்ம்….” சில விநாடிகள் யோசித்தவன்.. “வந்துடுவேன்...ஆனா..கொஞசம் லேட்டாகும்..அவ்வளவுதான்”
“அப்படின்னா இன்னிக்கு ப்ரொக்ராமைக் கேன்சல் பண்ணிடலாமே”
“எதுக்கு…நான் மதியமே உங்க ஆபீஸூக்கு வந்து உன்னோட டிக்கெட்டைக் குடுத்துடறேன்..நீ தியேட்டருக்குப் போய்டு..அங்க எனக்காக வெய்ட் பண்ணு..”
அரைமனதுடன் சம்மதித்து போனை அணைத்தாள் ப்ரியா.
மாலை.
சாமுண்டி தியேட்டர் வாசலில் ஆறரை மணி வரை வினோத்துக்காக காத்திருந்த ப்ரியா அவன் வராமல் போக மொபைலுக்கு அழைத்தாள்.
'ப்ரியா…நீ தியேட்டருக்குள்ளார போயிடு…பத்து நிமிஷத்துல நான் வந்து உள்ளார ஜாயின் பண்ணிக்கறேன்”
தியேட்டருக்குள் புகுந்தாள் ப்ரியா.
பத்தே நிமிடத்தில் இருட்டில் தடுமாறிக் கொண்டு வந்து சேர்ந்தான் வினோத்.
“ஸாரி ப்ரியா..போன எடத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
“தெரியுமே..இப்படி ஏதாவதொரு சாக்கு சொல்லுவேன்னு”