“பாருடா அந்த பொண்ணுக்கும் கல்யாணத்துல இஷ்டமில்ல . . . மேல ஏதோ படிக்கணுமாம்” என்றார்
“இங்க எப்படி மாற்றம் வந்ததோ . . . அதே மாதிரி அங்கேயும் வரும்” என்றான் பொருள்புதைந்த புன்னகையுடன். அவன் பெற்றோர் விசித்திரமாக அவனை பார்த்தனர்.
“இதை நேத்து சொல்லி தொலைக்கலாம்ல” கடுகடுத்தார்.
“அது அதுக்கு நேரம் காலம் வரவேண்டாமா?” பதில் தெரியாமல் வாயில் வந்ததை சொல்லிவைத்தான்.
அதே நேரம் பத்மினி வீட்டில் . . .
“அப்பா எனக்கு ராகவனை பிடிச்சிருக்கு . . கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடுங்க” தேங்காய் உடைப்பதுப் போல மனதை வெளிப்படுத்தினாள் பத்மினி.
“பப்பி உனக்கு உடம்பு சரியில்லயாமா?” என அவள் அம்மா அலமேலு ஆதங்கத்துடன் கேட்டார்.
“ஏன்மா நல்லாதான் இருக்கேன்”
“இல்ல கல்யாணத்துக்கு சரினு சொல்ற . . . அதான் ” என முடிக்க முடியாமல் தவிக்க
“அது பத்து நாள் முன்ன . . . இன்னிக்கு எனக்கு சம்மதம்” விரிந்த புன்னகையுடன் கூறினாள்.