உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.
சாப்பிட்டு முடித்த முரளி தட்டிலேயே கை கழுவப் போக, “டேய்...டேய்...போடா...வீட்டுக்குப் பின்னாடி போயி கை கழுவிட்டு வாடா” என்றாள் ராக்கம்மா.
“அடப் போம்மா....காலெல்லாம் வலிக்குது” நடக்க சங்கடப்பட்டு அவன் சொல்ல,
“அப்படியெல்லாம் தட்டுல கை கழுவக் கூடாதுடா” புதிதாய்ச் சொன்னாள் ராக்கம்மா.
“இது என்னம்மா புதுசா இருக்கு?...நான் எப்பவுமே தட்டுலதானே கை கழுவுவேன்?”
“டேய்...அதான் ஆகாது”ன்னு சொல்றேனல்ல?...போடா பின்னாடி போய் வாழை மரத்துக்குப் பக்கத்துல பக்கெட்ல தண்ணி இருக்கு எடுத்துக் கையைக் கழுவிட்டு வாடா” மகனை விரட்டினாள் ராக்கம்மா.
தாயின் அந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கையை நக்கிக் கொண்டே வீட்டின் பின் புறம் வந்து பக்கெட் தண்ணீரில் கையைக் கழுவக் குனிந்த போது, “மு...ர...ளி” என்ற அசரீரீ கேட்க,
சட்டென்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான். “ச்சே...தனசேகர் என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் வரத் திரும்பினான்.
“மு...ர...ளி” மீண்டும் அதே குரல்.
அதையும் தன் மனப்பிரமை என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் வந்தவனிடம் அவன் தாய் கேட்டாள்.
“என்னடா...கை கழுவிட்டு வந்திட்டியா?”
“ம்...வந்திட்டேன்!” என்றவன், “அம்மா...குனிஞ்சு கை கழுவும் போது என் பின்னாடியிருந்து தனசேகர் என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருந்திச்சும்மா” என்றான்.