“அப்படியா?..ஒருவேளைஉன்னைத் தேடி அவன் நேரிலேயே வந்திட்டானோ என்னவோ?” தமாஷாய்ச் சொன்னாள் ராக்கம்மா.
“அப்படி மட்டும் வந்திருந்தா...அவனை இங்கிருந்து திரும்பிப் போகவே விட மாட்டேன்!...என் கூடவே வெச்சுக்குவேன்!” கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு சொன்னான் முரளி.
“அப்படியா?...கொஞ்சம் இரு ஒரு மந்திரம் போட்டு அவனை வரவழைக்கறேன்!...உன் ஆசைப்படி அவனை உன் கூடவே வெச்சுக்கோ” என்றவள் கண்களை மூடி சும்மா வேணும் எதையோ முணுமுணுத்தாள்.
“ஆஹா...நீ பெரிய மோடி வித்தைக்காரி...நீ மந்திரம் போட்டா உடனே பல நூறு மைல் தள்ளி இருக்கற தனசேகர் இங்கே வந்திடுவானாக்கும்?...அடப் போம்மா...நாம எந்த திசையில் இருக்கிறோம்!ன்னே அவனுக்குத் தெரியாது”
“நீயும் உன் கண்களை மூடு” என்றாள் ராக்கம்மா கண்களை மூடிக் கொண்டே.
தாயின் ஆசைக்காக சும்மாவாகிலும் கண்களை மூடி நின்றான் முரளி. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, “ம்...இப்பக் கண்களைத் திறந்து பார்”என்றாள் ராக்கம்மா.
சாதாரணமாய்க் கண்களைத் திறந்த முரளி, எதிரே தனசேகர் நிற்பதைக் கண்டதும், முதலில் நம்பாதவனாய், புன்னகைத்தபடியே கையால் தொட முயற்சித்தான்.
உண்மையிலேயே அவன் கைகளில் தனசேகரின் உடல் பட, அவசர அவசரமாய் மொத்த உடலையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.
“அம்மா...நிஜமாவே தனசேகர் வந்திட்டான்”என்று கூவியபடி அவனை இறுக அணைத்துக் கொண்டு தழுதழுத்தான்.
“டேய்...டேய்...சேகர்...எப்படா வந்தே?..எப்படிடா வந்தே?”