லேசான முனகலுடன் அந்த சொக்கு புரண்டு படுக்க, அருகில் வந்து பார்த்தாள் வசந்தி. அப்போதுதான் அவள் கண்களில் அந்தக் காயம் பட்டது. முழங்கையில் சுமார் இரண்டு அங்கு நீளத்தில் சிராய்ப்புக் காயம்.
“அடடே...போதையில் மயங்கி விழுந்தப்ப காயம் ஆயிடுச்சு போலிருக்கே?” என்று நினைத்தபடியே வீட்டின் பின் புறம் சென்று, கள்ளிப்பூட்டான் தழையை கொத்தாகப் பறித்துக் கொண்டு வந்து, உள்ளங்கையில் வைத்து நசுக்கி, அதன் பச்சை நிற சாற்றை ரத்தக் காயத்தின் மீது விழச் செய்தாள்.
பின்னர் அந்த தழையைக் காயத்தின் மீது வைத்து ஒரு வெள்ளைத் துணியால் கட்டி விட்டாள். “ஹும்...இப்படிக் குடிச்சுட்டு...நடு ரோட்டுல விழுந்து கையிலும் காலிலும் காயத்தை வாங்கிறதெல்லாம் ஒரு பொழப்பா?...குடிக்கற பயலுகளுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இருக்காதா?....இப்படியா காசை செலவழிச்சு காயத்தை வாங்கிக்குவாங்க!...” தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
வலியால் முனகிக் கொண்டு அந்தச் சொக்கு திரும்பிப் படுத்த போது, இடுப்புப் பகுதியில் அவன் மறைத்து வைத்திருந்த கத்தி தெரிய, சிரித்துக் கொண்டாள் வசந்தி. “இன்னும் கத்தி எடுக்கற பழக்கத்தை விடலை போலிருக்கு”
தொடரும்