மஞ்சு உண்மையாகவே நடுநடுங்கி தான் போனாள்!
இன்று வரை அவளை ஒருவரும் அடித்தது இல்லை, அடிக்க முயன்றதும் இல்லை!!! மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அங்கே ஒரு இளவரசி போல தான் அவளை அவள் பெற்றோர் வளர்த்திருந்தார்கள்!
திருமணத்திற்குப் பின் எத்தனையோ விதமான ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டாள். ஆனால் இது???!!!
கிட்டத்தட்ட அவள் கன்னத்தில் படுவதுப் போல வந்த தன் கையை கடைசி வினாடியில் திரும்ப எடுத்துக் கொண்டான் மனோஜ்! இருந்தாலும் அவனின் கை அவளின் கன்னத்தை உரசி தான் சென்றது!!!
அதுவே தீயாக அவளை சுட்டது!
மஞ்சுவை பார்க்க பிடிக்காதவன் போல முகத்தை திருப்பிக் கொண்ட மனோஜ்,
“இன்னைக்கு வரைக்கும் நான் யாரையும் அடிச்சதில்லை, ஹர்ட் செய்ததில்லை! என்னை அதெல்லாம் செய்ய வைக்காதே மஞ்சு! யாரு தயவிலேயும் வாழ வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. எனக்கு திறமை இருக்கு. என் மேல யாருக்கு நம்பிக்கை இல்லைனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கு! முதல்ல அமுதா கிட்ட சொல்லி அந்த வேலை எல்லாம் வேண்டாம்னு சொல்லிடு!” என்றான்!
பிறகு அவள் பக்கம் பார்த்தவன்,
“இன்னொரு தடவை நீ இப்படி செய்தா, நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்...” என்றான் கோபம் பொங்க!
அதை சொல்லி முடித்ததும் கார் சாவியை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி சென்றான்!