கைப்பேசியை கீழே வைத்து விட்டு சில வினாடிகள் சிந்தனையில் ஆழ்ந்தான் விவேக்.
**************
அந்த வார இறுதியிலும் பாரதியின் விடுதிக்கு சென்றான் விவேக். மீண்டும் அதே சித்ரா வந்து பழைய அதேக் கதையை திரும்பவும் சொன்னாள்!!!
சித்ராவை ஒருப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் விவேக். இப்போதும், அவன் செல்வதைப் பார்த்து உறுதி செய்து விட்டு சித்ராவும் மாடிக்கு சென்றாள்.
ஆனால் விவேக் இந்த முறை அங்கே இருந்து கிளம்பி செல்ல வில்லை. பாரதி தங்கி இருந்த ஹாஸ்டலுக்கு அருகிலேயே ஒரு சிறுவர் பூங்கா இருந்தது. அங்கே சென்று ஹாஸ்டல் வாசல் தெரியுமாறு ஒரு பெஞ்சில் அமர்ந்துக் கொண்டான். பக்கத்தில் விற்றுக் கொண்டிருந்த வேர்கடலையை வாங்கி மெதுவாக சாப்பிட்டப்படி ஹாஸ்டல் வாசலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விவேக்கின் பொறுமைக்கு பதில் கிடைத்தது. ஹாஸ்டலில் இல்லை என்று சொன்ன பாரதி, அதே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தாள்!!!
ஆட்டோவிற்காக அவள் காத்திருப்பதை கண்ட விவேக், இப்போது அவள் முன் சென்று இப்போது நின்றால் எப்படி இருக்கும் என்று நினைத்தான். ஆனால், அவளின் பொய்யை அவன் அறிந்துக் கொண்டதை அறிந்தால் பாரதி மனம் வருந்தக் கூடும்! அது விவேக்கிற்கு விருப்பமில்லை. எனவே அவள் ஆட்டோ பிடித்துச் செல்வதை அமைதியாக பார்த்து இருந்து விட்டு, தன் காரில் சற்றே தொலைவில் அவளைப் பின் தொடர்ந்தான்.
பாரதி ஆட்டோவில் இருந்து இறங்கி சென்ற வீட்டையும், அந்த முகவரியையும் குறித்துக் கொண்டான். பின், திரும்பி தன் வழியே வீட்டிற்கு சென்றான்...!!!
*********