தன் காரை அந்த அலுவலகத்தின் முன் நிறுத்தினான் ரமேஷ். இது அவனுடைய சொந்த கார் இல்லை. அவன் அலுவலகத்தில் அவனுக்கு உதவ கொடுக்கப் பட்டிருந்த வாகனம். பொதுவாக ரமேஷ் அதை தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன் படுத்துவதில்லை. ஆனால், இன்று அவனுக்கு முக்கிய வேலை இருந்ததால் அவசரத்திற்கு என்று கொண்டு வந்திருந்தான். அந்த அலுவலக கட்டிடத்தின் உள்ளேச் சென்று ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதை சொன்னவன், அந்த வரவேற்பாளர் காட்டிய திசையில் சென்றான்.
அரை மணி நேரத்தில் விரும்பிய விஷயங்களை சேகரித்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்தான் ரமேஷ். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவனுக்கு முக்கிய மீட்டிங் ஒன்றிருந்தது.
வேகமாக நடந்து கார் அருகில் சென்றவன், தன் கார் பக்கத்தில் உயரமாக, நன்கு டிப் டாப்பாக உடையணிந்த ஒருவன் நிற்பதைப் பார்த்தான். தான் அருகில் சென்றவுடன் அவன் விலகிச் சென்று விடுவான் என்று ஊகித்து காரின் அருகில் சென்றான் ரமேஷ்.
ஆனால் அந்த இளைஞனோ அவனுக்காகவே காத்திருப்பது போல் புன்னகையோடு நின்றான்.
"வாங்க ரமேஷ், போன காரியம் காயா பழமா? வேண்டிய விஷயம் எல்லாம் கிடைத்ததா?" என்று விசாரிக்கக் வேறு செய்தான்!
ரமேஷிற்கு குழப்பமாக இருந்தது...
"நீங்க...."
"என்னங்க... எனக்கு உங்க வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் செய்துத் தரத் தானே ஒவ்வொருத்தராய் தேடி என்னைப் பத்தி விசாரிச்சிட்டு இருக்கீங்க? உங்களுக்கு என்னைத் தெரியாதா என்ன?"
"ஒ! நீங்க மிஸ்டர் விவேக்...."