தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 26 - பிந்து வினோத்
26. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
"பாரதி, இது அநியாயம், பசிக்குதுன்னு சொன்னால், சாப்பிட ஆர்டர் செய்யாமல் பூ நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இருக்க..." என்றான் விவேக்!
"சாரி சாரி, ஆர்டர் செய்வோம்." என்று அவசரமாக மெனு கார்டில் பார்வையை செலுத்திய பாரதி,
"விவேக், எனக்கும் சேர்த்து நீங்களே ஆர்டர் செய்ங்க. நான் இந்த டிஷ் பெயர் எதுவுமே கேள்வி பட்டதில்லை..." என்றாள்.
அவள் தயக்கம் இல்லாது அதை சொன்னது விவேக்கிற்கு மனதுள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. முகத்தில் ஒரு இளநகை தோன்ற, அவனே அவளுக்காக உணவுகளை தேர்வு செய்தான். ஆனால் முதலில் அவளுக்கு என்ன மாதிரி உணவு வகை பிடிக்கும் என்று கேட்டு விட்டு பின் தான் தேர்வு செய்தான்.
அவனின் அந்த செய்கை பாரதிக்கு மிகவும் பிடித்திருந்தது! இவனால் எப்படி எப்போதும், அவளுக்குப் பிடித்தது போல் நடக்க முடிகிறது என்று மனதில் நினைத்த படி அமர்ந்திருந்தாள் பாரதி.
தங்களுக்கு எவ்ண்டிய உணவுகளை ஆர்டர் செய்த விவேக்கும் கூட சிந்தனையில் தான் ஆழ்ந்திருந்தான். பாரதியை எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என சிந்தித்துக் கொண்டிருந்தான்.
ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அங்கே நிலவிய அமைதியை தொடர விரும்பாமல்,
"நீங்களும் காலேஜ்க்கு நெக்ஸ்ட் மந்த் தான் போகனுமா?" என பாரதியிடம் கேட்டான் விவேக்
"யெஸ்..."
"இந்த இயர் புது சப்ஜெக்ட் ஏதாவது எடுக்கப் போறீங்களா?"