தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 27 - பிந்து வினோத்
27. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
பாலாவை அழைத்துக் கொண்டு ஹோட்டல் சிப்பந்தி சென்றப் பின் மீண்டும் சேரில் அமர்ந்த விவேக், பாரதி பக்கம் பார்வையை செலுத்தினான். அவளின் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்து கடுப்புடன்,
"இப்போ எதுக்கு இந்த கண்ணீர்? அவனை அடித்ததற்கா? உண்மையில் நீ அவனை அடித்திருக்கனும்..." என்றான் கோபம் குரலிலும் எதிரொலிக்க!
"நிஜம் விவேக்! நான் செய்ய ஆசை பட்டது தான்... இதுவரை செய்ய முடியாமல் இருந்தது. அவனை பல முறை திட்டி இருக்கிறேன்... ஆனால் அது எல்லாம் இன்னைக்கு நீங்க செய்ததுப் போல இல்லை. ரொம்ப தேங்க்ஸ்!" என்றாள் பாரதி அவசரமாக.
"இந்த தேங்க்ஸ்க்கு எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை. ஏன் இப்படி கண்டவனும் ஏதாவது பேச விடனும்? கல்யாணம்னு ஒன்னு நடந்தால் இப்படி எல்லாம் அவனால் பேச முடியுமா?"
"விவேக்...”
"பாரதி, நான் சொல்வதைக் கேள்! நம்ம இரண்டுப் பேருக்கும் கல்யாணம் நடந்தால் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது. உனக்கு பாதுகாப்பு, எனக்கு என் மனதை, கனவுகளை புரிந்துக் கொண்ட ஒரு மனைவி கிடைப்பாள்."
"நான் யோசித்து..." என்று பாரதி பேசத் தொடங்கும் போதே அவள் சொல்ல வருவதை அனுமானித்து தலை அசைத்தான் விவேக்.
பாரதி பேச்சை நிறுத்தவும்,
"நோ, எனக்கு இப்போதே பதில் வேண்டும்!" என்றான் பிடிவாதத்துடன்!
அந்த பதிலில் தெளிவாக தெரிந்த பிடிவாதத்தில் திகைத்து குழம்பிப் போனாள் பாரதி. விவேக் முகத்திலும் அதே பிடிவாதம் தெரியவும், ஏன் இப்படி அவசரப் படுத்துகிறான் என மனதில் கலங்கி வருந்தினாள். எவ்வளவு நல்ல விதமாக எல்லாம் சென்று கொண்டிருந்தது...