தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 28 - பிந்து வினோத்
28. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
பவித்ரா வேகமாக யோசித்தாள்... அவளுக்கு பாரதியை நன்றாக தெரியும்... எனவே வேகமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவளாக,
"பாரு, உனக்கு என் மீது நம்பிக்கை இருக்கா?" என தோழியிடம் கேட்டாள்!
"என்ன பவி கேள்வி இது? இந்த உலகில் எனக்கு இருக்கும் ஒரே உறவு, நட்பு நீதான்..." என்றாள் பாரதி நெகிழ்ச்சியுடன்.
"குட்... அப்போ நான் சொல்வதைக் கேள்... இந்த கல்யாணம் உன் நல்லதிற்கு தான்... நீ எப்போதும் இப்படி தனியாகவே இருக்க முடியுமா? உனக்கு இப்போ என்ன தயக்கம்? விவேக்குக்கு உன்னைப் பற்றி முழுதாக தெரியாது, அது தானே? உனக்கு கோபம் அதிகம், அதிலும் முன் கோபம் அதிகம்.... முறைக்காதே... ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான், பாரு, குணமும் இருக்கும்... விவேக் இதை எல்லாம் புரிந்துக் கொள்வார். எல்லோருமே மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டு எல்லாம் திருமணம் செய்துக் கொள்வதில்லை... ஆனாலும் திருமணத்திற்குப் பின், ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு சந்தோஷமாக வாழுறாங்க.... உன் மனசுல எதையாவது யோசித்து குழப்பி கொண்டிருக்காமல், சந்தோஷமா கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்... எல்லாம் நல்ல படியாக தான் நடக்கும், பாரு!"
பவித்ரா சொல்வதைக் கேட்டப்படி இருந்த பாரதிக்கு, முதல் முதலாக இந்த திருமணம் நல்லதிற்கு தானோ என்று தோன்றியது!
*****
ஹோட்டலில் பாரதி விவேக்கிடம் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன உடனேயே, விவேக் சுறுசுறுப்பாக காரியங்களை செய்தான். இரண்டே நாட்களில் நரேந்திரனும், கற்பகமும், குடும்பத்துடன் ரமேஷின் வீட்டிற்கு வந்து முறைப் படி பேசினார்கள். கமலாவும், ரமேஷும் பாரதியின் தாயாக, அண்ணனாக இருந்து, அனைத்தையும் பேசி முடிவு செய்தனர். பாரதிக்கு கல்லூரி விடுமுறை முடிய மூன்று வாரங்கள் இருந்த படியால், இந்த விடுமுறை நேரத்திலேயே திருமணம் நடத்தி விட முடிவு செய்தனர். விவேக்கின் திருமணத்தை