தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 34 - பிந்து வினோத்
34. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தூங்கி எழுந்திருந்த விவேக்கின் தலைவலி சரியானதை தெரிந்துக் கொண்டு, அவனுக்கு உணவை அறைக்கே எடுத்து வந்துக் கொடுத்தாள் பாரதி. அவன் சாப்பிட்டு முடித்ததும், அவனையும் பவித்ரா வீட்டிற்கு செல்ல கிளம்ப சொன்னாள்... அவளும் கிளம்பும் வேலையில் ஈடுப்பட்டாள்... பேச்சினாலும், செயல்களினாலும் அவளை சீண்டியப் படி விவேக் ரெடி ஆவதை பிடிக்காததைப் போல் காட்டிக் கொண்டு மனதில் மிகவும் விரும்பினாள் பாரதி...
பச்சை வண்ணத்தில் தங்க நிற பார்டர் இருந்த பட்டுப் புடவையில் தேவதையாக தோன்றிய மனைவியை இமைக்க மறந்து பார்த்து ரசித்தான் விவேக். அவன் அணித்து இருந்த நீல வண்ண கட்டம் போட்ட காட்டன் சட்டையில் கம்பீரமாக தோன்றினான் விவேக். அவனை பார்க்காததுப் போல் பார்த்து, ரசித்தப் படி, காலையில் மேஜையின் உள் வைத்த நகைகளை வெளியில் எடுத்த பாரதியின் முகத்தில் சட்டென்று சலிப்பு தோன்றியது. மனைவியையே பார்த்துக் கொண்டிருந்த விவேக், அவள் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கவனிக்க தவறவில்லை.
“என்ன ரதி, என்ன ஆச்சு?” என்று உடனே வினவினான்.
பாரதி கேள்வியுடன் நிமிர்ந்துப் பார்க்க, அவளின் முகவடிவை கையால் வரைந்து என்ன என சைகையாலே கேட்டான் விவேக்!
சின்ன முக மாற்றத்திலேயே ஏதோ சரி இல்லை என சரியாக புரிந்துக் கொண்ட கணவனை பெருமையோடுப் பார்த்தாள் பாரதி. அவனிடம் எதையும் மறைக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை... ஆனாலும் கல்யாணம் ஆன முதல் நாளே அவனுடைய அம்மாவைப் பற்றி அவனிடமே புகார் சொல்ல அவளுக்கே பிடிக்கவில்லை. எனவே, ஒரு புன்னகையோடு, மனதில் இருப்பதை மறைத்து,
“இந்த நகையை எல்லாம் போட்டுட்டு இருக்குறது கடுப்பா இருக்கு விவேக்...“ என்றாள்.
பாரதியின் பெருமை கலந்த மலர்ந்த பார்வையிலேயே மயங்கி நின்ற விவேக், அவள் சொன்னதைக் கேட்டு அவளின் அருகே வந்தான்...