அவனுடன் வாகாக ஒண்டிக் கொண்டவளின் உச்சி வகிட்டில் முத்தம் பதித்தான் தென்றல்வாணன்.
உறவு என்று யாருமில்லாமல் வளர்ந்த தென்றல்வாணனுக்கு முதல் முதலாக மனைவி என்று உறவானவள் சத்யா தான்.
அவர்களின் காதலை சத்யாவின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.
திடமாக அவர்களை எதிர்த்து நின்று போராடி இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள். இப்போதும் கூட சத்யாவின் அம்மாவிற்கு அதில் வருத்தம் இருந்தது.
தென்றல்வாணனைப் பொறுத்த வரை சத்யா அவனின் உயிரையும் விட இனியவள்.
அதனாலேயே கணவன் என்ற வட்டத்தை தாண்டி அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே பொஸஸிவ்னஸ் உண்டு. சத்யாவிற்கும் அது தெரியும் ஆனால் கண்டுக் கொள்ளமாட்டாள்...!
🌼🌸❀✿🌷
“ரைட் சைட் திரும்புங்க சக்தி! இது தான் ட்வென்டி போர்த் ஸ்ட்ரீட். இங்கே தான் அஹல்யா வீடு இருக்கு. ஜீப்பை ஸ்லோவா ஓட்டுங்க... அபினவ் சொன்ன அடையாளத்தை வச்சு அஹல்யா வீட்டை கண்டுப்பிடிப்போம்...”
சக்தி சாலையின் இரண்டுப் பக்கமும் கூர்மையாக பார்வையை பதித்த படி ஜீப்பை மெதுவாக ஓட்டினாள். இன்றைய அவளின் டீஷர்ட் UNMOVABLE - UN STOPPAABLE - UN BREAKABLE - A DETERMINED WOMAN என்ற வாக்கியம் இருந்தது
“அதோ அந்த வீடு தான்னு நினைக்கிறேன்...”
சத்யா காட்டிய வீட்டு காம்பவுண்ட் சுவரின் பக்கத்தில் காரை நிறுத்தினாள் சக்தி.