சொன்னது போல் சரியான நேரத்திற்கு ஆஃபீஸில் இருந்து கிளம்பினான் விவேக். பாரதியின் கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் அவளின் மொபைலில் அவளை அழைத்து, அவன் வந்து விட்ட விஷயத்தை சொன்னான். ஒரு சில நிமிடங்களில் அவன் காத்துக் கொண்டிருந்த இடத்திற்கு பாரதியும் வந்தாள்... இப்போதெல்லாம் அவனை பார்க்கும் போது அவள் கண்களில் மின்னும் காதல் இப்போதும் ஜகஜோதியாக ஒளிர்ந்தது...
அதை பார்த்து ரசித்துக் கொண்டே,
“என்ன லெக்சரர் மேடம், என்ன விஷயம்? இப்போவாவது சொல்லுங்க...” என்றான் விவேக் விளையாட்டாக!
“சொல்றேன்... அதுக்கு முன்னாடி கார் சாவியை கொடுங்க...” என்றுக் கேட்டுக் கொண்டே கையை நீட்டினாள் பாரதி.
“சாவியா, எதுக்கு?” என்று கேள்வி கேட்ட போதும், அவள் கேட்ட சாவியை தயங்காமல் எடுத்து அவளிடம் கொடுத்தான் விவேக்.
“கார் சாவியை வச்சு வேற என்ன செய்வாங்க? கார் தான் ஓட்டுவாங்க...” என்று சொல்லிக் கொண்டே கண் சிமிட்டினாள் பாரதி...
விவேக் அவளின் நடவடிக்கைகளை அதிசயமாக பார்த்துக் கொண்டே நிற்க, பாரதி அவனை தாண்டி சென்று, கார் கதவை திறந்து, டிரைவர் இருக்கையில் அமர்ந்தாள்.
விவேக் அப்போதும் நின்ற இடத்திலேயே இருக்கவும்,
“வாங்க விவேக், இங்கே உட்காருங்க, இன்னைக்கு நான் டிரைவ் செய்றேன்,” என அவள் அருகே இருந்த பேசஞ்சர் சீட்டைக் காண்பித்தாள் பாரதி.
எதுவும் சொல்லாமல், சுற்றி வந்து காரில் அமர்ந்தான் விவேக்.