சத்யா வேகமாக கேட்டை திறந்து போய் விட, சக்தி பொறுமையாக ரோடை, மற்ற வீடுகளை பார்வை இட்டு விட்டு உள்ளே சென்றாள்.
சத்யாவிற்காக க்ரில் கதவை திறந்து இருந்த அபினவ் டென்ஷனுடன் சத்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“... வேற என்ன செய்றது? லீவுன்னு சொல்லிட்டேன். நானே ஹாண்டில் செய்துப்பேன். நீங்க விட்ருங்கக்கா.”
“அபினவ், சக்தி அஹல்யா கிட்ட பேசனுமாம். நீங்க ஸ்டேஷன் போறதுக்கு முன்னாடி சக்தி கிட்ட ஒரு தேவை பேசிடுங்க,” என சத்யா சொல்ல,
“சாரி அக்கா. சாரி சக்தி மேடம். உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. நீங்க எவ்வளவு சின்சியர்ன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் இப்போ உங்க ஹெல்ப் வேண்டாம். அஹல்யா ஏற்கனவே பயந்து போய் இருக்கா. நாங்களே மேனேஜ் செய்துக்குறோம். அது தான் சரி,” என கடுகைப் போல படப் பட என பொரிந்தான் அபினவ்.
“அபினவ்!” பேச ஆரம்பித்த சத்யாவை அவளுடைய கையைப் பிடித்து தடுத்தாள் சக்தி.
“அபினவ், நீங்க இரண்டுப் பேரும் எந்த மாதிரி மனநிலைல இருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடியும். இட்ஸ் ஆல் ரைட். அஹல்யாக்கு லீகல் ஹெல்ப்க்கு ப்ளான் செய்துட்டீங்களா? லாயரை வரச் சொல்லி இருக்கீங்களா?” என விசாரித்தாள் சக்தி.
“லாயரா? நான் அதை எல்லாம் யோசிக்கலையே சக்தி மேடம். தேன் சார் தேவை இருந்தா அவரே கட்டாயம் சொல்லி இருப்பார்,” என்றான் அபினவ்.
“இருக்கலாம் அபினவ்! உங்களுக்கும் நம்ம சட்டம் தெரியும்னு நினைக்கிறேன். சாட்சியா விசாரிக்க வுமன் யாரையும் ஸ்டேஷனுக்கு வர சொல்ல மாட்டாங்க. சீரியஸ் மேட்டர்னா தான் அதை தாண்டி செய்வாங்க.”