காலில் விழுந்தவளை அன்புடன் பார்த்து
”தீர்க்க சுமங்கலியா இரு” என சொல்லி அவளை எழுப்பிவிட்டு நிற்க வைத்து அவளைக் கண்டு பூரித்துப் போனார்
”எவ்ளோ அழகா அம்சமா இருக்க சின்ன மருமகளே, உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா” என கேட்க அவளோ மென்மையாக ஆம் என்பது போல் தலையாட்டினாள். அதில் அவர் முகம் மலர்ந்து தன் மகனைப் பார்த்து
”என்னடா அப்படியே சிலை போல நிக்கற, வீட்டுக்கு சின்ன மருமகள் வந்திருக்கா, அவளை கூட்டிக்கிட்டு உன் ரூமுக்கு போ, நான் போய் ஆடு கோழின்னு பெரிசா விருந்து ஏற்பாடு செய்றேன், அவள் என்ன கேட்டாலும் நீ செய்யனும், இனி அவள் உன் பொறுப்பு, அவள் கண்ல இருந்து துளி கண்ணீர் வந்தது, பெத்த பையன்னு கூட உன்னை பார்க்க மாட்டேன் ஜாக்கிரதை” என மிரட்ட அதில் அவன் அரண்டு பலமாக தலையை மட்டும் ஆட்டி ஒரு கையில் அருவாளுடன் இன்னொரு கையில் மஹதியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். மங்களமோ விருந்து ஏற்பாடு செய்ய செல்ல நடப்பதைக் கண்டு மிரட்சியுடன் இருந்தார் வீரசிங்கம்
வந்த வேலை முடிந்தது என நினைத்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து நைஸாக கிளம்பிச் சென்றார்கள் குபேரனும் வேணியும். ஜானகிக்கு மட்டும் எதுவும் விளங்கவில்லை, மஹதி எதற்காக இப்படி செய்கிறாள் என தெரியாமல் தவித்தாள்.
வேங்கையன் அறைக்குள் வந்த மஹதியோ அந்த அறையை சுற்றி முற்றி பார்க்க இன்னும் படபடப்புடன் இருந்த வேங்கையனோ அவளின் கையை விடாமல் பிடித்திருந்தான். அவளோ அவனின் கைஇறுக்கத்தைக்கூட ரசித்தாள். அவனை பார்த்து மென்மையாகச் சிரித்து வைக்க அவனோ கஷ்டப்பட்டு சிரித்து
”உன் பேர் என்ன” என்று கேட்க அவளோ
”என் பேரு மஹதி” என்றாள் புன்னகையுடன்