அடுத்து அந்த இன்னொரு டாக்டர் கிருஷ்ணாவுடைய கிளினிக்கிற்கு சக்தியும், சத்யாவும் சென்றார்கள்.
அலட்டாமல் அவர்களுக்கு பதில் சொன்னார் கிருஷ்ணா.
“நீங்க அன்னைக்கு பேசின டீச்சர் பத்தி எனக்கும் தெரியும். அவங்க பையனுக்கு உடம்பு சரி இல்லாம போனா என் கிட்ட தான் அழைச்சுட்டு வருவாங்க. ரொம்ப நல்லப் பொண்ணு. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எனக்கும் சந்தோஷம். இங்கே கிளினிக்ல வேலை செய்றவங்க கிட்ட அதைப் பத்தி பேசினேன். என் வைஃப் கிட்ட கூட சொன்னதா ஞாபகம். வேற யார் கிட்டேயும் பேசலை. எதுக்கு கேட்குறீங்க?”
“அவங்களுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு டாக்டர். புதுசா யாரோ எதுவோ புரளி ஆரம்பிச்சு விட்ருக்காங்க. அதான் யாருன்னு கண்டுப்பிடிக்க பார்க்கிறோம்.”
“இந்தக் காலத்துல புரளிக்கா பஞ்சம்? ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்ன்னு யார் வேணா எந்த மாதிரி நியூஸ் வேணா பரப்பி விட முடியுதே. பாவம் அந்தப் பொண்ணு!”
“அவங்களை கல்யாணம் செய்துக்குறவர் அதைப் பத்தி எல்லாம் கவலை படலை டாக்டர்.”
“குட்! நல்லவரா இருக்காரே, பரவாயில்லை!”
ஜீப்பிற்கு வந்த உடன் சக்தியும், சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!
“இந்த ஊருல இருக்க முக்கால் வாசி பேருக்கு நாம டாக்டர் பிரசாத் கிட்ட பேசினது தெரியும் போலருக்கே! இதுல யாரு அந்த மொட்டைக் கடிதாசி அனுப்பினதுன்னு எப்படி சக்தி கண்டுப்பிடிக்குறது?” சத்யா சோர்வுடன் வினவினாள்!
“கஷ்டம் தான் சத்யா! இது வேஸ்ட் வேலை போல தெரியுது. இன்ஸ்பெக்டர் தேனுக்கு போட்டோ, மொட்டைக் கடிதாசின்னு ஏதேதோ க்ளூஸ் கிடைக்குது. நமக்கு எதுவும் கிடைக்க மாட்டேங்குதே! நாம வேற ஆங்கிள்ல தான் யோசிக்கனும்,” என்றாள் சக்தி.