பாரதி பக்கம் பார்த்தபடியே சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன், திடுமென சிந்தனை கலைந்து அசைந்தான். அவனின் பார்வையை பாரதி பார்த்திருக்க கூடும் என்ற எண்ணம் தோன்றவும், அவசரமாக யோசித்து,
“பரவாயில்லையே பா...ர..தி.. நான் நினைச்சதை விட நீ ரொம்பவே பலே ஆளு தான்...” என்றான்.
எப்படியும் அவளை மட்டம் தட்டுவது போல் ஏதோ சொல்ல போகிறான் என்பதை உணர்ந்தவளாய் அமைதியாக இருந்தாள் பாரதி!
“எனக்கும் உனக்கும் நடுவில் இருக்கும் இந்த உறவுக்கே அர்த்தம் இல்லைன்னு சொல்றேன்... நீ என்னடான்னா அம்மா அப்பா ஃபங்க்ஷனுக்கு டான்னு கிளம்பி நிக்குற! பரவாயில்லையே... நான் கூட உனக்கு ரோஷம், மரியாதை எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் ரொம்ப ஜாஸ்த்தின்னு நினைச்சேன்...”
பாரதி பதில் சொல்லாமல் விவேக்கையே கூர்ந்துப் பார்த்தபடி நின்றாள்.
“சின்ன அண்ணி...”
கீழே இருந்து மதுவின் குரல் கேட்கவும், கணவனை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
“வரேன் மது...” என பதில் சொல்லிக் கொண்டே, அங்கே இருந்து நகர்ந்தாள்.
🌼🌸❀✿🌷
பாரதி வேகமாக மாடிப்படி இறங்கி மதுவை நோக்கி சென்றாள். அப்போது பாரதியின் எதிரில் வந்த கற்பகம் எதையோ அவளிடம் சொல்ல வருவதாக தோன்றியது... ஆனால் மனதை மாற்றிக் கொண்டவள் போல மருமகளிடம் எதையும் சொல்லாமல் தாண்டி சென்றாள் பெரியவள். என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி இறங்கிய பாரதி, எதிரில் வந்த மதுவையும், உமாவையும் பார்த்து சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள்.