உமா அவளின் பெற்றோரை உபசரிக்க நகரவும், பாரதி அங்கே தனித்து விடப் பட்டாள். என்ன செய்வது என்று யோசித்த படி மெதுவாக நடந்தவள், எதிரில் வந்த தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரு போலி புன்னகையை வழங்கினாள். விவேக் எங்கே என்ற கேள்வியும் அவளை குடைந்துக் கொண்டிருந்தது...
பவித்ரா இருந்தாலாவது பரவாயில்லை... அவசரமாக செல்ஃபோனை எடுத்து பவித்ராவை அழைத்தவள், மீண்டும் ஏமாற்றத்துடன் ஃபோனை வைத்தாள்.
“பாரதி...!”
கற்பகம் அவளை அழைக்கவும், பாரதி கற்பகம் இருந்த இடத்திற்கே சென்றாள்.
“டெய்சி, இது தான் பாரதி, என் சின்ன மருமகள்," என்று தன் தோழியிடம் சொன்ன கற்பகம், பாரதியிடம், "பாரதி இவ என் க்ளோஸ் ஃப்ரென்ட் டெய்சி. உங்க கல்யாண நேரத்தில சிங்கப்பூர் போயிருந்ததால் அவளால கல்யாணத்துக்கு வர முடியலை...” என்று சொல்லி தோழியை அறிமுகம் செய்தாள்!
“வணக்கம் அ.. ஆன்ட்டி...”
பாரதியின் தயக்கமான வணக்கத்தை ஏற்றுக் கொண்டப்படி, ஏதோ அவளின் உயரத்தை அளப்பவள் போல் பாரதியை மேலிருந்து கீழ் அளவெடுத்தாள் டெய்சி.
“ம்ம்ம்... விவேக் தலை சுத்திப் போய் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுல தப்பே இல்லை! நீ ரொம்ப அழகா இருக்க பாரதி...”
மதுவும், உமாவும் சொன்னதில் எதையோ எதிர்பார்த்திருந்த பாரதி, கொஞ்சமும் எதிர்பார்க்காது வந்த டெய்சியின் புகழுரையில் கொஞ்சம் திகைத்தாள். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, ஓரு புன்னகையோடு,