“அண்ணி கூப்பிட சொன்னாங்க...” என்று பாரதியிடம் சொல்லிவிட்டு, மது அவளுடைய நட்பு வட்டத்துடன் கலந்துக் கொள்ள சென்றாள்.
“பாரதி, இவங்க என் அம்மா, அப்பா! கல்யாணத்திலேயே பார்த்திருப்ப...” உமா அவளின் பக்கத்தில் இருந்த பெரியவர்களை பாரதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள்!
“ஆமாம், ஞாபகம் இருக்கு... வணக்கம்ப்பா... வணக்கம்மா... எப்படி இருக்கீங்க?” என அவர்களிடம் நலம் விசாரித்தாள் பாரதி.
பொதுவான விசாரிப்புகள் தொடர்ந்துக் கொண்டிருந்தப் போது,
“வா, வா, டெய்சி...” என்ற கற்பகத்தின் குரல் சத்தமாக கேட்டது. அனைவரும் கற்பகத்தின் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தார்கள்.
கற்பகம் அன்பொழுக வரவேற்ற அந்த பெண்மணி தான் மதுவும், உமாவும் சொன்ன டெய்சி சைமனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் பாரதி. நடிகை ஸ்ரீவித்யாவின் சாயலில் இருந்த அந்த பெண்மணியிடம் கற்பகம் முகம் மலர பேசிக் கொண்டிருந்தாள்.
“பாரதி, பவித்ராவை இன்னும் காணுமே? அவ எப்போ வருவான்னு உனக்கு தெரியுமா?” உமாவின் கேள்வி பாரதியின் கவனத்தை திருப்பியது!
“தெரியலை உமா. இரண்டு நாளாவே அவளை ஃபோன்ல ரீச் செய்ய முடியலை, நெட்வொர்க் ப்ராப்ளம் போல இருக்கு!”
“இப்போ எல்லாம் எந்த நெட்வொர்க்குமே சரி இல்லை... சரி, நான் அம்மா அப்பாவுக்கு ஒரு நல்ல சீட் கண்டுபிடிச்சு கொடுத்துட்டு வரேன்...”
“சரி உமா. எனக்காக நீங்க சீக்கிரம் எல்லாம் வர வேண்டாம். அம்மாவோட டைம் ஸ்பென்ட் செய்ங்க...”