“தெரியாதே சார்!”
“வீட்டு வாடகையை யார் கிட்ட கொடுத்தீங்க?”
“தெரிஞ்சவங்க மூலமா கண்டுப்பிடிச்ச வீடு சார். அவங்க வாடகை வேண்டாம்னு சொல்லிட்டாங்க!”
“யார் அந்த தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியுமா?”
“அது... மு...ம்...பை...ல... இருந்தவங்க ஸா...ர்...” அஹல்யா தட்டு தடுமாறி பதில் சொன்ன விதம் சத்யா, தென்றல்வாணன் இரண்டுப் பேரின் மனதையும் இளகச் செய்தது.
தென்றல்வாணனுக்கு மேலே விபரங்கள் தேவைப்பட்டாலும் அஹல்யாவை அந்த நேரத்திலேயே கட்டாயப்படுத்திக் கேட்க மனம் வரவில்லை.
“இன்னைக்கு எனக்கு பந்தோபஸ்த் ட்யூட்டி இருக்கு. அதனால நான் பிஸி. நாளைக்கு இதைப் பத்தி பேசலாம் அஹல்யா. எனக்கு முழு டீடெயில்ஸ் வேணும்,” என்றான் தென்றல்வாணன்
அஹல்யா அரை மனதுடன் தலையை ஆட்டினாள்.
“சத்யா, நான் வர காலைல ஆயிடும். ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருவேன். அஹல்யாவும் அருணும் தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டிலேயே வந்து தங்கிக்க சொல்லு. நைட் தூங்குறதுக்கு முன்னாடி எல்லா கதவும் நல்லா லாக் ஆகி இருக்கான்னு பார்த்துக்கோ,” என மனைவியிடம் சொன்னான் தென்றல்வாணன்!
கணவன் கோடவுனில் கண்டெடுத்த ஸ்டாம்ப் பேப்பரை வைத்து அஹல்யாவிடம் கேள்வி கேட்டது சத்யாவிற்கு புரிந்தது. ஆனால் ஏன் இப்படி கூடுதலாக பாதுகாப்பு பற்றி யோசிக்கிறான் என்பது புரியவில்லை. அவன் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டான். எனவே என்னவோ விஷயம் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.