அஹல்யாவுடன் அவளின் பழைய வீட்டிற்கு போக திட்டமிட்டிருப்பதை கணவனிடம் சொல்லலாமா என்று யோசித்து மனதை மாற்றிக் கொண்டாள். தேன் கட்டாயம் வேண்டாம் என்று தான் சொல்வான்!
“கதவு லாக் ஆகி இருக்கான்னுன் பார்க்குறது எல்லாம் நான் எப்போவும் செய்றது தான். நான் பார்த்துக்குறேன். நீங்களும் நைட் ஏதாவது டைமுக்கு சாப்பிடுங்க,” என்றாள் சத்யா!
“சரி சத்யா. நான் கிளம்புறேன். அஹல்யா, முடிஞ்ச அளவுக்கு நீங்க தனியா இருக்க வேண்டாம். சத்யா கூடவே இருங்க!” தென்றல்வாணன் மீண்டும் வலியுறுத்தினான்!
அவன் கிளம்பிப் போன பிறகு சத்யாவும், அஹல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அஹல்யாவின் கண்களில் இருந்த பயம் சத்யாவிற்கு தெரிந்தது. அவளை இயல்பாக்க பேச்சுக் கொடுத்தாள்.
“அந்த வீட்டுல திருட வந்தாங்களே அதனால அவர் சொல்றார். வேற ஒன்னும் இல்லை. நீங்க சாப்பிட்டீங்களா அஹல்யா?”
“இன்னும் இல்லைங்க!”
“சாப்பிடுறீங்களா? என் சாம்பார் செம சூப்பரா இருக்கும்!”
“இல்லை, பரவாயில்லை!”
“சும்மா வாங்க அஹல்யா. எதுக்கு இவ்வளவு யோசிக்குறீங்க. அருண் விளையாடி முடிக்கட்டும். நீங்க முதல்ல சாப்பிடுங்க.” சத்யா அஹல்யா மறுக்க இடம் கொடுக்காமல் அவளை கட்டாயப் படுத்தி உட்கார வைத்து உணவு பரிமாறினாள்.
வெகு நாளுக்கு பிறகு கிடைத்த அன்பில் மனம் நெகிழ்ந்துப் போனாள் அஹல்யா. சத்யாவின் சாம்பார் அவள் சொன்னதுப் போலவே மணமும், சுவையுமாக இருந்தது. சத்யாவின் அன்பான கவனிப்பினால் இன்னும் அதிக சுவையுடன் அவளுக்கு ருசித்தது.