ஆனால் அவளுக்கு அவனின் விழிகள் சொன்ன செய்தி புரிந்தது... அவனின் மனம் புரிந்தது... அதில் இருந்த பரிதவிப்பு புரிந்தது... அவளை மீண்டும் பார்த்ததால் அவனிடம் வந்திருந்த நிம்மதி உணர்வு புரிந்தது...
கிருத்திகா மந்திரத்தினால் கட்டப் பட்டவளைப் போல அசையாமல், இமைக்காமல் தியாகுவையே பார்த்துக் கொண்டு நின்றாள்...
அவளின் பக்கத்தில் இருந்த மிருதுளா கிருத்திகாவையும், தியாகுவையும் மாறி மாறி சில வினாடிகள் பார்த்தாள்... ஹுஹும்... அவர்கள் இருவருமே 'ஸ்டேச்யூ' போஸில் இருந்து வெளி வருவதாக தெரியவில்லை... மெல்ல தொண்டையை கணைத்துப் பார்த்தாள்... அப்போதும் கிருத்திகா அசையவில்லை...
மிருதுளா கிருத்திகாவின் அருகே சென்று அவளின் தோளை மெல்ல தொட்டாள்... கிருத்திகா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்...!
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டே இருக்கிறதா ப்ளான்???? எங்களுக்கு இப்போவே கால் வலிக்குது...!!! இங்கே இவ்வளவு பாசமா கேள்வி கேட்குறவங்க பக்கமும் கொஞ்சமா பார்க்க கூடாதா?”
மிருதுளா கேலி மின்ன மெல்லிய குரலில் அவள் காதில் சொல்ல, கிருத்திகா வெட்கத்துடன் பார்வையை திருப்பி மற்றவர்களை பார்த்து, அவர்களிடம் பேச முயன்றாள்!
🌼🌸❀✿🌷
“கல்யாண ஆல்பம், பர்த் சர்டிஃபிகேட், எங்க குடும்ப ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தாச்சு... இப்போ உங்க சந்தேகம் போயிருக்கும்ன்னு நினைக்கிறேன்...” பொறுமையாக பேசினார் ரங்கராஜன், கிருத்திகாவின் அப்பா!
மேஜை மீது பரந்து விரிந்திருந்த பேப்பர்களை, புகைப்படங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, நிமிர்ந்து எதிரே இருந்தவரைப் பார்த்தான் வெற்றி!