அவளுக்கு தோன்றவில்லை...
மாலையில் வந்த உடன் அவன் பார்த்த பார்வையில், அந்த கல் முகத்தையும் மீறி அவளுக்கு தெரிந்த அந்த கரிசனம் பொய்யாக இருக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.
ஆனால் எதற்காக மனதில் இருப்பதை மூடி மறைக்கிறான் அவன்????
மேலோட்டமாக யோசித்தால் அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கு தியாகு தான் காரணம் என்ற சந்தேகம் அவளுக்கும் ஏற்பட வேண்டும்... ஆனால் அவளுக்கு அப்படி நினைக்கவும் பிடிக்கவில்லை...!
அது ஏன் எதனால் என்று விளக்கமும் அவளிடம் இல்லை... ஆனால்... மனதின் பாதையில் முடிவெடுத்தவள், தியாகு நல்லவன் என மனதார நம்பினாள்!
தானாக அவளின் பார்வை தியாகுவிடம் மீண்டும் சென்றது... அவன் இப்போதும் அப்படியே கற்சிலையாக தான் அமர்ந்திருந்தான்...
அவனருகே சென்று ஆறுதலாக பேச வேண்டும் எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு, அருகே இருந்த கீதாவிடம் மெல்லியக் குரலில்,
“அண்ணி, எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா????” என்றாள் தயக்கத்துடன்.
“சொல்லு பிரின்சஸ்,” என்றாள் கீதா ஆச்சர்யத்துடன்!
“அவரை நான் எப்படி கூப்பிடுவேன்??? தியாகுன்னு தானா? இல்லை வாங்க போங்கன்னு பேசும் போது மரியாதை கொடுத்து பேசுவேனா???”
டாக்டர் போட்டு உடைத்திருந்த அணுகுண்டை தொடர்ந்து பெரிதாக எதையோ கேட்கப் போகிறாள் என எதிர்பார்த்திருந்த கீதா, கிருத்திகாவின் கேள்வியை கேட்டு இன்னும் அதிகமாக ஆச்சர்யப்பட்டாள். ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டு அவளின் கேள்விக்கு பதில் சொன்னாள்.