விவேக்கின் மனதில் அவர்களின் திடீர் வருகை கேள்வியை ஏற்படுத்தியது! ஆனாலும், அவனும் அவர்களிடம் எப்போதும் போல தான் பேசினான்!
பவித்ரா வந்திருப்பது தெரிந்த உடன் வேலையாளிடம் சிற்றுண்டி எடுத்து வர சொல்லிவிட்டு, உமாவும் அங்கே வந்தாள்!
சிற்றுண்டி எடுத்து வந்த வேலையாளிடம் பவித்ராவும், கமலாவும் வந்திருப்பதை சொல்லி பாரதியை அழைத்து வர சொல்லி அனுப்பினாள் கற்பகம். பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு, மெதுவாக பேச்சை தொடங்கினாள் கமலா.
“பாரதிக்கு இப்போ லீவ் தானே, கொஞ்ச நாள் அவ எங்க வீட்டில் வந்து தங்கி இருக்குறதா இருந்தா இருக்கட்டுமேன்னு தான் அழைச்சிட்டு போக வந்தோம்... உங்களுக்கு மறுப்பு எதுவும் இல்லைனா ஒரு, ஒரு மாசம் பாரதி அங்கே தங்கி இருக்கட்டுமே...”
“ஒரு மாசமா? அதெல்லாம் வேண்டாம்...”
கமலா பேசி முடிக்கும் முன் ஒலித்த விவேக்கின் மறுப்பில் அங்கிருந்த அனைவருமே கேள்வியோடு அவனைப் பார்த்தார்கள்!
பவித்ராவே கூட மனதினுள் 'ஒரு மாதமா' என்று தான் ஆச்சர்யப் பட்டுக் கொண்டிருந்தாள்! ஆனாலும் விவேக் வேண்டாம் என்று சொன்ன விதம் அவளுக்கு குழப்பத்தைக் கொடுத்தது... பாரதி சொன்ன தகவல்களுக்கும் இதற்கும் இருக்கும் 'நான் லீனியர் ரிலேஷன்ஷிப்' அவளை யோசிக்க வைத்தது... பாரதியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கான காரணம் இப்போது அவளுக்கும் புரிவதுப் போல இருந்தது...
பவித்ரா தன் யோசனையில் ஆழ்ந்திருக்க, கமலா விவேக்கை பார்த்து புரிந்துக் கொண்ட பாவனையில் புன்னகை புரிந்தாள்!
“ஆமாம் தம்பி, பாரதி ஒரு மாசம் வீட்டுல தங்கி இருந்தா பவித்ராவோட பி.ஹெச்.டி'க்கும் உதவியா இருக்கும்...”