அவன் இது வரை அவள் பக்கம் ஒரு முறை கூட திரும்பி பார்க்கவும் இல்லை... பேசவும் இல்லை...
முன் தினம் கூட அவன் எதுவும் பேசவில்லை தான்...
ஏன் என்ற கேள்வி மனதினுள் எழுந்து அவளை வாட்டியது... ஆனாலும் மிருதுளா சொன்ன அறிவுரையை மனதில் கொண்டு, மனதின் கேள்வியை ஒதுக்கி விட்டு, தியாகராஜனுடன் பேச்சு கொடுக்க முயன்றாள்.
“பின்னாடி சீட்டில இருக்கிறது நம்ம கல்யாண ஆல்பமா???”
“ம்ம்ம்...”
திரும்பி பார்க்காமலே பதில் வந்தது அவனிடம் இருந்து!
“நான் எடுத்து பார்க்கட்டுமா?”
“ம்ம்ம்ம்...”
ஆர்வத்துடன் பின் சீட்டில் இருந்த ஆல்பத்தை எட்டி கையில் எடுத்துப் புரட்டினாள்.
போட்டோக்களில் மணமக்களுடன் நின்றிருந்தவர்களை கவனிக்காமல் மணமக்களை மட்டுமே பார்த்தாள்...
ஏனோ அந்த புகைபடங்களில் இருந்த மணமகள் அவள் தான் என்று நம்புவது அவளுக்கு கடினமாக இருந்தது...
போட்டோக்களில் இருந்த ‘அந்த’ பெண் அழகாக இருந்தாள்... ஆனாலும் அவளிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாக கிருத்திகாவிற்கு தோன்றியது.