இந்த விஷயத்தில் விவேக் சொன்ன காரணம் உண்மை இல்லை... விவேக்கின் கண்களில் அத்தனை நாட்கள் தெரிந்த அன்பு பொய்யாக இருக்க வாய்ப்பில்லை... வேறு என்ன காரணமாக இருக்கும்?
பாலா ஏதேனும் சொல்லி இருந்தாலும் விவேக் அதை எல்லாம் பெரிதாக நினைக்க கூடியவன் இல்லை... ஒருவேளை அவள் நினைத்ததுப் போல லாவண்யா அவன் வாழ்வில் மீண்டும் வந்திருப்பது காரணமாக இருக்க கூடுமா? திருமணமாகி மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவனுக்கு அது போல எல்லாம் மனதில் குழப்பம் ஏற்படுமா என்ன?
பாரதி பாலாவைப் பற்றி யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு இன்று பாலாவின் மீது வெறுப்பு மட்டும் தான் இருந்தது. அவனை பற்றி நினைக்கவே கசந்தது! கணவனை, அவளுடைய ஆனந்தத்தை மீட்டு கொடுத்த அவளின் ஆனந்தை தவிர வேறு யாருக்கும் அவளின் இதயத்தில் சிறு இடமும் இல்லை...
ஆண்களின் விஷயம் இது போல இல்லையோ? இதை பற்றி விவேக்கிடம் பேசுவதற்கு பதில் லாவண்யாவிடம் பேசினால் என்ன? அப்படி என்ன அவளுடைய ஆனந்திற்கு இந்த லாவண்யாவிடம் பிடித்திருக்கிறது?
இந்த கேள்வி தோன்றிய உடனேயே லாவண்யாவை நேரில் சந்திப்பது என்ற பாரதியின் எண்ணம் வலுவடைந்தது... அவளின் யோசனையை தடை செய்வதுப் போல அவளின் செல்ஃபோன் மெல்ல சிணுங்கியது. ஃபோனை கையில் எடுத்துப் பார்த்தவள், அழைப்பது மது என்பதை தெரிந்துக் கொண்டு அழைப்பை ஏற்றாள்!
“ஹலோ மது!”
“அண்ணி பிஸியா இருக்கீங்களா?” மதுவின் குரல் உற்சாகத்துடன் ஒலித்தது!
அதைப் பற்றி யோசித்துக் கொண்டே, “பிஸியா எல்லாம் இல்லையே, ஏன் மது?” என்றாள் பாரதி!