ஏர்போர்ட் வந்து சேர்ந்தப் பிறகு அவளை அவன் மிருதுளா மற்றும் கீதா பக்கத்தில் விட்டு விட்டு தள்ளி போய் விடவும், கிருத்திகாவிற்கு கோபம் கோபமாக வந்தது!
அதெல்லாம் போதாதென ஃப்ளைட்டில் கீதாவை அவள் அருகில் உட்கார வைத்து விட்டு அவன் விஜய் அருகே சென்று அமர்ந்துக் கொள்ளவும், கிருத்திகா காதில் புகை வராமல் தடுக்க பெரும் பாடு பட வேண்டி இருந்தது!
பறவையாக ஏர்இந்தியா விமானம் வானில் பறக்க தொடங்கியதும், அவளருகே அமர்ந்திருந்தத கீதா,
“என்ன பிரின்சஸ் அமைதியா இருக்க?” எனக் கேட்டாள்!
“ப்ச்... ஒண்ணுமில்லை...” என அலுத்துக் கொண்டாள் கிருத்திகா!
“என்னடா இப்படி இவ பக்கத்துல உட்கார வச்சுட்டாங்களேன்னு யோசிக்குறீயா??? இன்னும் கொஞ்சம் நேரம் தாங்க மேடம்... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க...”
“நான் அப்படி எல்லாம் யோசிக்கலை... ஆனால் அதை யோசிக்குறது நீங்க தான்னு இப்போ உங்க பேச்சு வச்சு தெரியுது...!”
“நானா? ஓ...! உங்க அண்ணனுக்காக சொல்றீயா??? நீ வேற! நாங்க எல்லாம் உங்க இரண்டுப் பேர் பக்கத்துல கூட வர முடியாது...”
“என்னையும் ராஜையுமா சொல்றீங்க??? சும்மா பேச்சுக்கு தானே இப்படி எல்லாம் சொல்றீங்க?”
“இல்லை பிரின்சஸ், நிஜமா தான் சொல்றேன். இரு உனக்கு ஒரு போட்டோ காட்டுறேன்...”
கீதா அவளுடைய போனில் கடலென இருந்த போடோக்களில் தேடி அந்த ஒரு போட்டோவை எடுத்து கிருத்திகாவிடம் காட்டினாள்.