மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
இதயம் படபடக்க, சிரித்து நிலைமையை சமாளிக்க முயன்றாள் ப்ரியம்வதா. ஆனால் அவளால் சிரிக்க தான் முடியவில்லை! வினாயக்கின் கண்கள் ரிமோட் கண்ட்ரோல் போல அவளை மொத்தமாக கட்டிப் போட்டிருந்தது! அவளின் உணர்வுகள், உடல் தசைகள் என எதுவுமே அந்தக் கணத்தில் வேலை செய்யவில்லை!
“ப்ரியா? வினாயக்!” எங்கேயோ இருந்துக் கேட்ட கலைவாணியின் அழைப்பு வினாயக்கின் ரிமோட் கன்ட்ரோலில் இருந்து ப்ரியம்வதாவை வெளியே கொண்டு வந்தது. வினாயக்கும் உணர்வு பெற்றவனாக ப்ரியம்வதாவை ஒரு முறை வித்தியாசமாக பார்த்து விட்டு ஜன்னல் பக்கம் பார்த்தான்.
ஜன்னலில் வழியே இப்போதும் சில்லென்ற காற்று உள்ளே வீசியது.
அவளுடைய வினாயக் அவளுக்கு கிடைத்து விடுவான்! ப்ரியம்வதாவின் காதல் கொண்ட இதயத்தில் நம்பிக்கை வேர் விட்டது.
🌼🌸❀✿🌷
விடிகாலையின் அழகை ரசித்துக் கொண்டே ஜாகிங் செய்துக் கொண்டிருந்தாள் சக்தி. மதியூருக்கு வந்த நாள் முதலே அவளுடைய வாழ்க்கை பாதை ரொம்பவே மாறி போய் இருந்தது. காலை நேரத்தில் ஜாகிங் செய்வது டீன் ஏஜ் முதலே சக்தி வைத்து இருக்கும் பழக்கம். இருந்தாலும், மதியூர் வருவதற்கு முன்னால் சக்தி இப்படி எல்லாம் இயற்கையை ரசித்ததில்லை. போலீஸ் என்ற முறையில் சுற்றி இருக்கும் மனிதர்கள் மேலே கவனம், கையில் இருக்கும் கேஸ் பற்றிய யோசனை என்று எதையாவது நினைத்துக் கொண்டே தான் ஓடுவாள்.
இப்போது வேலையை ரிசைன் செய்து இங்கே வந்த பிறகு, தோழி சத்யாவின் கீதா உபதேசத்தால் அதை எல்லாம் தாண்டி சுற்றி இருக்கும் உலகத்தையும் கவனிக்க தொடங்கி இருந்தாள்!
அவள் இன்று வந்திருந்த பகுதியின் சாலைகள் சீரமைக்க படாததால் கரடு முரடாக இருந்தது.