வேகமாக நடந்து பாரதியின் அருகில் சென்றவன், அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு,
“ஐ ஆம் சாரி ரதி... ரியல்லி சாரி...” என்றான்!
வெகு நாளிற்கு பிறகு கணவனின் அன்பானக் குரலை கேட்டு பாரதி நெகிழ்ந்துப் போனாள். அவன் சொன்ன ‘சாரி’யும் அவர்களுக்குள் எல்லாம் சரி ஆகிவிட போகிறது என்ற நம்பிக்கையை அவளுக்கு கொடுத்தது. ஆனாலும் அவள் இருந்த இடத்தை பாரதி மறந்து விடவில்லை. பக்கத்தில் நின்ற தோழியையும், கமலாவையும் மனதில் கொண்டு கணவனின் கைப்பிடியில் இருந்த தன் கைகளை விடுவிக்க முயன்றாள்! ஆனால் விவேக் என்ன நினைத்தானோ அவன் அவள் கரங்களை விடுவதாக இல்லை... இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டான்!
பாரதி என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில், கமலா,
“வாங்க தம்பி... காலைல கூட உங்களைப் பத்தி பாரதி கிட்ட பேசிட்டு இருந்தேன்... நீங்க இரண்டு பேரும் உள்ளே போய் பேசுங்க... பாரதி அவரை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போம்மா...” என்றாள்!
அதற்கு மேல் விவேக்கிற்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டி இருக்கவில்லை! கமலா சொன்ன அந்த அறையும் அவன் அறிந்தது தானே! கிட்டத்தட்ட பாரதியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்... அறையின் உள்ளே சென்றதும் கதவை மூட அவன் அவள் கையை விடவும்,
“என்ன ஆனந்த் இது?” என சினுங்கினாள் பாரதி.
“உன் கிட்ட சரியா பேசியே எத்தனை நாள் ஆச்சு ரதி...” என்ற விவேக், அவள் பதில் எதுவும் சொல்ல அனுமதிக்காமல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
மறுப்பேதும் சொல்லாமல் பாரதி அவனின் அணைப்பை ஏற்றுக் கொள்ளவும், மேலும் அவளை இறுக அணைத்துக் கொண்டான் விவேக்!