அன்று முழு நாளுமே எதனாலோ பாரதிக்கு மற்ற நாட்களை விட அதிகமாக விவேக்கின் நினைவு வந்தபடி இருந்தது!
ஒருவேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால் இருக்குமோ என்று நினைத்து, பவித்ராவின் தீசிஸிற்கு உதவ முயன்றாள். ஆனாலும் அவளின் மனம் தொடர்ந்து முரண்டுப் பிடித்துக் கொண்டே இருந்தது!
அவர்களுக்குள் இப்போது எல்லாம் சுமுகமாக இல்லை என்றாலும், திருமணத்திற்கு பின் முதல் முறையாக விவேக்கை பிரிந்து இருப்பதாலாக இருக்குமோ?
பாரதிக்கு விடை தெரியவில்லை... ஆனால், மீண்டும் இரண்டு முறை விவேக்கை செல்ஃபோனில் தொடர்புக் கொள்ள முயன்றாள்... ரிங் ஆகாமல் ‘ஸ்விச்ட் ஆஃப்’ என்ற பதில் வரவும், விவேக் எப்போதும் போல் பிஸியாக இருக்கிறான் போலும் என்று நினைத்துக் கொண்டாள்...
எதை எதையோ நினைத்தப்படி கஷ்டப்பட்டு பகல் பொழுதை தள்ளிய பாரதி, மாலை நேரம் தொடங்கவும், முன்பெல்லாம் விவேக் அலுவலகத்தில் திரும்பி வரும் நேரம் என்பதை எண்ணியபடி அமர்ந்திருந்தாள். அவளருகில் இருந்த பவித்ரா மகளுக்கு வேக வைத்து மசித்த ஆப்பிளை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். இருவருடனும் பேசியபடி டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா.
வீட்டின் வெளியில் இருக்கும் கேட் திறக்கப் படும் சத்தம் கேட்டு மூன்றுப் பேரும் வெளியே எட்டிப் பார்த்தார்கள்!
கேட்டை திறந்து வந்த விவேக், மீண்டும் அந்த இரும்பு கேட்டை மூடி விட்டு வீட்டை நோக்கி வந்தான்! அவனின் கண்ணில் அவனின் மனைவி தான் முதலில் தெரிந்தாள்! ஒரே ஒரு கணம் அவள் அருகில் இருந்த மற்றவர்களும் அவனின் கருத்தில் பட்டார்கள்! ஆனால், தானாகவே அவனின் கண்கள் பாரதியின் பக்கம் திரும்பி சென்றது!