06. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா
படுக்கையறையில் கட்டிலின் அருகே தரையில் விழுந்துக்கிடந்தார் அப்பா.
பயம் பற்றிக்கொண்டது. இதயம் பதற கண்ணீர் வழியத்துவங்கியது
என்னவாயிற்று அப்பாவுக்கு! ?
ஜன்னலின் வழியே குரல் கொடுத்தாள் 'அப்பா.........'
கேட்கவில்லை அவருக்கு. அசைவில்லை அவரிடம்.
கதவை உள்பக்கம் தாழிட்டுக்கொண்டிருக்கிறாரா? எப்படி திறப்பது? ஜன்னலின் வழியே கையை உள்ளே விட்டு திறந்துவிட முடியுமா? அவள் முயன்றுக்கொண்டிருந்த நேரத்தில் சரியாய் வந்து நின்றது அந்த டாக்ஸி.
அதன் கதவை திறந்துக்கொண்டு இறங்கினான் விவேக்.
அந்த நேரத்தில் அர்ச்சனாவை அங்கே எதிர்பார்க்கவில்லை அவன். கண்கள் விரிய அவன் அவளை பார்த்த நேரத்தில், அவன் முன்னால் நின்றவள் அப்படியே உடைந்து விட்டிருந்தாள்.
அவள் கண்ணீர் அவனை என்னவோ செய்தது. இத்தனை நாள் கழித்து, என் தேவதையை இப்படி கண்ணீருடனா பார்க்கவேண்டும்?
என்னாச்சுமா? என்றான்.
'அப்பா.......உள்ளே.........கீழே கிடக்கிறார்..............'
அவனும், அந்த டாக்ஸி டிரைவரும் எப்படி கதவை திறந்தார்களோ அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அப்பாவின் அருகில் கண்ணீருடன் அமர்ந்தாள் அர்ச்சனா.
அவர் அருகில் அமர்ந்து பரிசோதித்த விவேக் சட்டென கேட்டான் 'சுகருக்கு மாத்திரை எடுத்துப்பாரா?'
'ம்' 'டெய்லி ராத்திரி' என்றபடி கன்னங்களை தாண்டிய கண்ணீரை துடைத்துக்கொண்டாள் அர்ச்சனா.
'சுகர் ரொம்ப லோ ஆகியிருக்கணும் அர்ச்சனா. ஒண்ணுமில்லை ஐ வில் டேக் கேர்'
அடுத்த பன்னிரண்டாவது நிமிடத்தில் அந்த மருத்துவமனையில் இருந்தனர். சற்றே பெரிய மருத்துவமனை அது.
வெகு இயல்பாய் அந்த மருத்துவமனையினுள் நுழைந்து இயங்கினான் விவேக். அவனுக்கு அங்கே கிடைத்த மரியாதை அர்ச்சனாவை ஆச்சர்யப்படுத்தியது. அவன் கண் அசைவில் அந்த மருத்துவமனையே இயங்கியது. எப்படி இது?
'நம் வீட்டிலேயே ஒரு டாக்டர் இருப்பது இத்தனை பெரிய பலமா?'
ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவளை அமரவைத்தான்.
'இங்க உட்காரு நான் வரேன். ரிலாக்ஸ் பேபி. நான் இப்போ வந்திடறேன்.
குளிர் சாதனத்தை இயங்க செய்துவிட்டு வெளியே சென்றான் விவேக்.
ஏதோ கனவில் இருப்பது போலே இருந்தது அர்ச்சனாவுக்கு. சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல், அடுத்து எதை சந்திக்க வேண்டி வருமோ என்ற பயத்துடனே அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
சில நிமிடங்கள் கழித்து அவள் முன்னால் பளீர் சிரிப்புடன் வந்து நின்றான்.
'யுவர் டாடி இஸ் அவுட் ஆப் டேன்ஜர் போதுமா?
சுவாசம் திரும்பியது அவளுக்கு. கண்ணீர் மட்டும் வழிந்துக்கொண்டே இருந்தது.
'ஏய் லூஸு' என்றான் விவேக். 'ஒரு பொண்ணுன்னு சொல்லிக்க வெக்கமா இல்லை உனக்கு.? இப்படி ஆம்பிளை மாதிரி அழுதிட்டிருக்கே.
'என்ன பார்க்கறே? இந்த காலத்துலே பொண்ணுங்களெல்லாம் அழறதில்லை. ஆம்பிளைகள்தான் ரவுண்டா உக்காந்து 'ஓ'ன்னு அழறாங்க தெரியுமா உனக்கு?
மெல்ல சிரித்தபடி கண்ணீரை துடைத்துக்கொண்டாள் அர்ச்சனா.
'தயவு செய்து அழாதே அர்ச்சனா' என்றான் விவேக்
எனக்கு அப்பாவை பார்க்கணும்.
பார்க்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்.
'நீங்க வரலைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன். நீங்க செஞ்ச ஹெல்புக்கு, எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை.' என்றாள் அர்ச்சனா
சில நொடிகள் யோசித்தவன் சட்டென சொன்னான் 'தேங்க்ஸ் சொல்றதுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா. சட்டுன்னு எனக்கு ஒரு லவ் லெட்டர் எழுதிக்கொடுத்திடு'
திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அர்ச்சனா .
என்ன 'அப்படி பார்க்கறே? 'நான் உனக்கு கொடுத்த லெட்டருக்கு நீ இன்னும் பதில் குடுக்கலை. தெரியுமா?
திகைப்புடன் அவன் முகத்தை ஆராய்ந்தவள் 'இல்லை எனக்கு.........'
மேஜை டிராயரிலிருந்து ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து அவளிடம் நீட்டினான்.
எஸ் டார்லிங். ஐ ம் ஸீரீயஸ். ஐ நீட் அ லவ் லெட்டர் ப்ரம் யூ ரைட் நவ்'
எழுது. நான் வந்திடறேன் என்றபடி கதவின் அருகே சென்றவன் கதவை திறந்தபடியே திரும்பி அவளைப்பார்த்தான்.
காகிதத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
'எனக்கு வசந்தை ரொம்ப பிடிச்சிருக்கு பெரியப்பா.' அன்று அவன் முன்னால், மனோவின் அப்பாவிடம் அவள் சொன்ன வார்த்தைகள் அவன் காதில் எதிரொலித்தன.
அவன் கண்களில் மெல்ல மெல்ல ஒரு தீவிரம் பரவ துவங்கியது.
சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஒரு பெருமூச்சுடன் கதவை சாத்திக்கொண்டு நகர்ந்தான்.