பூரித்து போயிருந்தாள் அர்ச்சனா. வசந்த் வீட்டிலிருந்து வந்த அனைவரிடமும் சில நிமிடங்களிலேயே அத்தனை நெருங்கி விட்டிருந்தாள் அர்ச்சனா.
ஏதோ பல நாட்கள் பழகியவர்கள் போல் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவளை கேலி செய்வதும், வம்புக்கு இழுப்பதுமாய் அத்தனை உற்சாகமாய் சுற்றிக்கொண்டிருந்தான் மனோ.
எல்லாரும் ஒன்று கூடி அவரை தனிமை படுத்திவிட்டதை போல் உணர்ந்தார் அப்பா.
எத்தனை முயன்றும் அங்கே நிகழ்ந்த சந்தோஷ நிகழ்வுகளில் அவரால் மனதார ஈடுபடவே முடியவில்லை.
மனோ திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து இவர்களின் திருமணம் என்று நாள் குறித்தார் மனோவின் அப்பா.
எல்லாம் முடிந்து கிளம்பும் முன்னர் வசந்தின் அப்பா சொன்ன அந்த வார்த்தை அர்ச்சனாவின் அப்பாவினுள்ளே புயலை கிளப்பியது.
'இன்னும் நாலஞ்சு மாசம் தான். உங்க பொண்ணோட என்னென்ன பேசணுமோ பேசிக்கோங்க. எங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் அவ உங்களை சுத்தமா மறந்துடுவா.'
மெல்ல நிமிர்ந்து அர்ச்சனாவின் முகத்தை ஆராய்ந்தார் அப்பா.
'சொல்லியிருக்க வேண்டும் அவள். என் அப்பாவை நான் எப்படி மறப்பேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.'
சொல்லவில்லை. அந்த வார்த்தைகளை விளையாட்டாய் எடுத்துக்கொண்டு மெல்ல சிரித்தாள் அவள்.
அப்பாவினுள்ளே எரிமலை பொங்கியது.
அவர் முகத்தை பார்த்தபடியே இடையில் புகுந்து சட்டென்று சொன்னான் வசந்த்.' அது எப்படிப்பா அவரை மறக்க முடியும்? அவரும் நம்ம கூடத்தான் இருப்பார்.
அவருக்குள்ளே சுரீரென்று பொங்கியது.
'என் மகளை தந்திரமாய் தன் பக்கம் இழுத்துவிட்டு, இப்போது நல்லவன் போல் வேடமிடுகிறான் இவன்.'
படுக்கையில் படுத்துக்கொண்டு பழைய நினைவுகளில் புரண்டுக்கொண்டிருந்தவரை வாசலில் வந்த காரின் ஒலி கலைத்தது. அர்ச்சனா வந்திருக்ககூடும்.
வாசல் கதவு திறந்தே இருந்தது.
யாருடனும் பேச விரும்பாதவராய் விளக்கை அணைத்து விட்டு படுத்துக்கொண்டார் அப்பா.
வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனாவின் கண்கள் அப்பாவை தேடின. அவர் அறைக்குள் நுழைந்து பார்த்தவள் சற்று திகைத்துதான் போனாள்
மணி ஒன்பதரை தானே? அதற்குள் உறங்கி விட்டாரா அப்பா?
அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் தன் அறைக்கு வந்து படுத்தாள் அர்ச்சனா.
தன் அறைக்கு வந்து படுத்த விவேகிற்கும் உறக்கம் கிட்டவில்லை.
அவன் மனம் ஆறவில்லை. என்னதான் இந்த விருந்தில் அர்ச்சனா கலந்து கொண்டாலும், அவள் ஏதோ ஒரு இயந்திரம் போல் நடமாடிக்கொண்டிருந்தது போலே தோன்றியது அவனுக்கு
எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வசந்த். அவனிடம் தான் தோற்று போனது போலே தோன்றியது விவேக்கிற்கு.
கட்டிலை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவன், ஹாலில் அமர்ந்து டி.வி யை திருப்பிக்கொண்டிருந்த ஸ்வேதாவிடம் வந்தான்.
'ஆமாம். எப்படி இருக்கார் உங்க வசந்த்.?
'இப்போ பரவாயில்லையாம்' என்றாள் ஸ்வேதா.
அவர் நம்பர் வெச்சிருக்கியா நீ.? குடு எப்படி இருக்கார்ன்னு கேட்போம்.
சற்று வியப்புடன் அவன் முகத்தைப்பார்த்தபடி எண்ணை கொடுத்தாள் ஸ்வேதா.
அதை வாங்கிக்கொண்டு மாடிக்கு படியேறினான் விவேக். அவனுக்குள்ளே கொதிப்பேறியது.
மாடி சுவற்றின் மீது கைகளை ஊன்றிக்கொண்டு அவன் தன் கைப்பேசியில் வசந்தின் எண்ணை அழுத்திய நொடியில், உறக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த அர்ச்சனா, சிறிது நேரம் மாடியில் அமர்ந்துவிட்டு வரும் எண்ணத்தில் மெல்ல படியேறினாள்.
'நான் விவேக் பேசறேன்' என்றான்.
ம்' என்றான் வசந்த் மறுமுனையில்.
என்ன மிஸ்டர் வசந்த். ஆக்சிடென்டாமே கேள்விப்பட்டேன்.
ம்.
படியேறிய அர்ச்சனா விவேக்கின் பின்னால் வந்து நின்றாள்.
பாவம் வசந்த் நீங்க. அங்கே நீங்க ஹாஸ்பிடல்ல படுத்திருக்கீங்க, இங்கே நாங்கெல்லாம் சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடிட்டிருக்கோம். உங்க உயிரான அர்ச்சனா இங்கே வந்து என் கூட கேக் வெட்டிட்டு இருக்கா சார்.
மெல்ல விரிந்தன அர்ச்சனாவின் கண்கள்.
ஸோ வாட்? என்றான் வசந்த் அலட்சியமாய்
அவன் அலட்சியம் விவேக்கினுள் கொதிப்பை அதிகரித்தது.
காலையிலிருந்து மனதை அழுத்திக்கொண்டிருக்கும் தன் ஆத்திரம் தீர அவனை நோகடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே பேசிக்கொண்டிருந்தான் விவேக்.
கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் அர்ச்சனா
அன்னைக்கு என்னமோ சொன்னியே, அவ என்கிட்டே வந்து சொல்லட்டும் அப்புறம் விட்டுக்கொடுக்கிறேன்னு, இன்னும் ஒரு வாரத்துலே உன்கிட்டே வந்து சொல்லுவா நான் விவேக்கை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு,.
'அதுக்கப்புறம் அவளை கல்யாணம் பண்ணி உன் கண்ணு முன்னாடியே அவ கூட நான் வாழ்ந்து காட்டறேன்'
அந்த வார்த்தைகள் அவள் இதயத்துக்குள்ளே ஊசியை இறக்கின. வசந்தின் மனதை காயப்படுத்தி பார்ப்பதில் இத்தனை ஆனந்தமா இவனுக்கு.?
இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்கும் அவன் மனம் எப்படியெல்லாம் துடித்துக்கொண்டிருக்கும்? நினைக்கும் போதே அவள் கண்களில் நீர் சேர்ந்தது.
பேசிக்கொண்டே மெல்ல திரும்பிய விவேக் அர்ச்சனாவை பார்த்த நொடியில், திடுக்கிட்டு போய் சுவாசிக்க கூட மறந்தவனாய் அப்படியே நின்றுவிட்டிருந்தான்.
தொடரும்
Manathile oru paattu episode # 10
Manathile oru paattu episode # 12
{kunena_discuss:683}