பயமும், குற்ற உணர்ச்சியும் ஆட்கொள்ள, அப்போது ஏற்பட்ட மன அழுத்ததில் அர்ச்சனா அலுவலகத்திலிருந்து வரும் போது நெஞ்சு வலியில் துடித்துக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு அர்ச்சனா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் சொன்ன ஒரே பதில் 'உன் அப்பா மேலே எந்த தப்பும் இல்லைமா. நீ என்னை நம்பு.'
'நம்பிக்கொண்டிருக்கிறாள். அவர் சொன்னதை கண்ணை மூடிக்கொண்டு இந்த நிமிடம் வரை நம்பிக்கொண்டு இருக்கிறாள் அர்ச்சனா.
அதன் பின் அவருக்காக மனோவிடம் பேசுவதை கூட தவிர்த்தாள் அர்ச்சனா.
மூன்று வருடங்களுக்கு பிறகு அவளுக்கு பெங்களூரில் அரசு வேலை கிடைத்த போது, மனோ மெல்ல நெருங்கி வர துவங்கினான்.
அப்போது கூட அவளை அங்கே அனுப்பாமல் இருந்துவிட முடியுமா என்று யோசிக்கத்தான் செய்தார் அப்பா.
தனக்கு கிடைத்த நல்ல வேலையை இழக்க விரும்பவில்லை அர்ச்சனா.
அதிலிருந்து தினமும் மன உளைச்சல் அவருக்கு. விவேக்குடன் அவளுக்கு திருமணம் நடந்து விட்டால் இது தீர்ந்து விடுமென தோன்றியது.
பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு எழுந்தார் அப்பா.
டில்லியின் மற்றொரு ஓரத்தில் தளர்ந்து போனவனாய் அமர்ந்திருந்தான் வசந்த். அப்பாவின் நினைவுகள் வரும்போதெல்லாம் அவன் மன வலிமை எல்லாம் காணாமல் போய்விடும்.
அர்ச்சனாவின் அப்பாவின் வார்த்தைகள் அவன் மனதில் அப்பாவின் நினைவுகளை அதிகமாக தூண்டி விட்டிருந்தன..
இரண்டு நாட்களாய் அப்பாவின் நினைவுகள் அவனை வருத்திக்கொண்டிருக்கின்றன அவர் புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அவனது வாழ்கையின் ஈடு செய்ய முடியாத இழப்பு அது .மனோவின் திருமணத்தில் இருந்து திரும்பியவர் புலம்பிக்கொண்டே இருந்தார்.
அனு என் பொண்ணு. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்.? எனக்கு என் பொண்ணு வேணும். அவ எப்பவும் என் பொண்ணாவே இருக்கணும். அவ எப்பவும் என் கூடவே இருக்கணும்
'சரி விடுங்க. அப்புறமா பேசிக்கலாம். எல்லாம் சரியாயிடும் பா. கொஞ்சம் அமைதியாக இருங்க.' திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான்.
என்ன நடந்தது என்று அவரை அப்போது கேட்கவில்லை அவன் இரண்டு நாட்கள் அவர் மனம் ஆறட்டும். அதன் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தான் இருந்தான்.
ஆனால் அதற்குள் நடந்தது எல்லாவற்றையும் எழுதி வைத்து விட்டு தன்னை முடித்துக்கொண்டிருந்தார். அந்த கடிதத்தின் வரிகள் இன்னமும் மனதில் அப்படியே இருக்கிறது.
வசந்த் உனக்கு நான் பெரிய துரோகம் செய்துவிட்டேன். அர்ச்சனாவும் எனக்கு இன்னொரு மகள். அவளை அழவைத்துவிட்டேன். என் காலம் முடிந்தது. அனுவை அவள் வீட்டில் சேர்த்து விடு. நீ அர்ச்சனாவை திருமணம் செய்துக்கொள்.
எப்படி செய்துகொள்கிறார்கள் தற்கொலை.? எப்படி மனம் வந்தது அவருக்கு.? அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சுற்றி இருப்பவர்கள் எத்தனை துடித்து போவார்கள் என்று கொஞ்சமேனும் யோசிக்க மாட்டார்களா? வாழ்கையை முடித்துக்கொள்ள ஆயிரம் காரணம் இருந்தால், வாழ்வதற்கு ஒரு காரணம் கூட கிடைக்காதா? மனம் தளர்ந்து போனவர்களின் ஒரு நிமிட முட்டாள்தனம் தானே அது? அந்த நிமிடத்தை கடந்து வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடாதா? தனக்குள்ளே பல நாட்கள் புலம்பிக்கொண்டிருந்தான் வசந்த்.
அதன் பிறகு அனுவின் பெற்றோரை தேடிப்பிடித்து சேர்த்துவைத்தான் வசந்த்.
அர்ச்சனாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட துடித்த மனோவை தடுத்தான். அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அவளையும் வருத்தப்படவைக்க விரும்பவில்லை வசந்த். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும்மென்று தோன்றியது.
இந்த நிமிடம் வரை அப்படியேதான் தோன்றிக்கொண்டிருக்கிறது அவனுக்கு. அப்பாவின் புகைப்படங்களையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்.
அர்ச்சனா அப்பாவின் வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அர்ச்சனாவின் மீது இப்படி ஒரு வெறி பிடித்த பாசமா அவருக்கு? ஒரு மூன்றாம் மனிதனாய் யோசிக்கும் போது தன் தந்தையின் உணர்வுகளுக்கும், அவர் உணர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தோன்றியது.
ஆனால் ஒரு தந்தையை பறிக்கொடுத்த மகனாய்.........................
மனம் தளரும் போதெல்லாம் அவனது உடனடி ஆறுதல் மனோ. அவனை அழைத்தான் வசந்த்.
பெங்களூரில் அதே நேரத்தில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த ஸ்வேதாவின் அருகே வந்து 'நீ நகரு' என்றபடி பாத்திரங்களை தேய்க்க துவங்கினார் அவள் அம்மா.
காலையில் அர்ச்சனாவின் முகத்தில் இருந்த தவிப்பு அம்மாவின் மனதை நிறையவே குழப்பி விட்டிருந்தது.
காரணமும் ஓரளவு புரிந்தது போலே இருந்தாலும், ஸ்வேதாவிடம் மெல்லக்கேட்டார், 'ஏன் ஸ்வேதா அந்த வசந்துக்கு கல்யாணம் ஆயிடுச்சா? உனக்கு ஏதாவது தெரியுமா?
அம்மாவிடம் ஏதோ சொல்ல நினைத்து, எப்படி துவங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தவள், சட்டென நிமிர்ந்தாள்.
சில நொடிகள் மௌனமாய் அம்மாவையே பார்த்தவள், சின்னதான பெருமூச்சுடன், இடம் வலமாய் தலையசைத்தாள் 'இல்லம்மா'. இங்கே நம்ம பக்கத்து வீட்டிலே தான் இருக்கார் அவர்.
அப்படியா..? என்று சற்று திடுக்கிட்டு நிமிர்ந்தவரின் முகத்தில் .யோசனை ரேகைகள் ஓட துவங்கின.
அம்மாவின் மன ஓட்டத்தை படித்தவளாய் சொன்னாள் ஸ்வேதா. 'நானே உன்கிட்டே சொல்லனும்னு நினைச்சேன். நீயே கேட்டுட்டே. அர்ச்சனா அவளோட அப்பாவுக்காக மட்டுமே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காமா. அவ மனசுலே இன்னமும் வசந்த்தான் இருக்கார்' என்றாள் நிதானமாய்.
அம்மா பதில் பேசாமல் ஸ்வேதாவையே பார்த்துக்கொண்டிருக்க, தொடர்ந்தாள் ஸ்வேதா,
'உண்மையிலேயே வசந்த் பாவம்மா. அவங்கப்பா போனதுக்கு அர்ச்சனாவோட அப்பாதான் காரணம்' என்றவள் நடந்தை எல்லாம் தன் அம்மாவிடம் கொட்டிவிட்டிருந்தாள்.
இப்படி கூட நடக்குமா? அதிர்ந்து போய் நின்றிருந்தவர்., சுதாரித்து கேட்டார் இதெல்லாம் மனோ உன்கிட்டே சொன்னாரா?
ம். என்றாள் ஸ்வேதா. இது அர்ச்சனாவுக்கு தெரியாது. தெரியவும் வேண்டாம். என்றவள், ப்ளீஸ் மா. வசந்தும் அர்ச்சனாவும் சேர்வது தான் நியாயம். அவங்களை பிரிச்ச பாவம் நமக்கு வேண்டாம். நீ அண்ணன் கிட்டே பேசும்மா.' என்றாள் கெஞ்சும் குரலில்.
ஸ்வேதாவின் வார்த்தைகளும், அதில் இருந்த உண்மைகளும் அம்மாவை ஒரு கணம் உலுக்க பாத்திரங்களை தேய்த்து முடித்து விட்டு மௌனமாய் அங்கிருந்து நகர்ந்தார்.
கோபம் மனதை அழுத்திக்கொண்டிருக்க, அன்று மாலை வேளையில் மொட்டை மாடியில் இங்கு அங்கும் நடந்துக்கொண்டிருந்தார் விவேக்கின் அப்பா. என்ன ஓடிக்கொண்டிருக்கிறது அர்ச்சனாவின் மனதில் இன்னமும் அந்த வசந்தையே நினைத்துக்கொண்டிருக்கிறாளா என்ன?
கைப்பேசியை எடுத்து அர்ச்சனாவின் அப்பாவை அழைத்தார்.
அவர் ஹலோ’ என்ற மறுநொடி இவர் சட்டென எகிறினார்,
‘என்ன நினைச்சிட்டிருக்கா உங்க பொண்ணு? என்னமோ என் பையனை பார்த்து மூஞ்சியை திருப்பிட்டு போறா? இன்னமும் அந்த வசந்தை நினைச்சு உருகிட்டிருக்காளா?
அந்த வார்த்தைகளில் ஒரு நொடி திடுக்கிட்டு, கூசிப்போனார் அர்ச்சனாவின் அப்பா.