சரியாய் அந்த நேரத்தில் அவன் அறைக்குள் நுழைந்தார் அம்மா.
நாற்காலியை விட்டு எழுந்தவன் ‘அம்மா உன் மடியிலே கொஞ்ச நேரம் படுத்துக்கவா மா?’ என்றான் தழைந்த குரலில்.
மடியில் சாய்ந்த மகனின் மனநிலையை புரிந்துக்கொண்டவராய் அவன் தலையை மெல்ல வருடிக்கொடுத்தார் அம்மா. தன் மகன் சரியாய் முடிவெடுப்பான் என்ற நம்பிக்கையில் எதுவுமே பேசவில்லை அவர்.
மனம் மெங்கும் ஏதோ ஒரு அமைதி பரவியது. கண்களை மூடிகொண்டான் சில நாட்களாய் அலைபாய்ந்துக்கொண்டிருந்த, மனம் மெல்ல மெல்ல ஒரு நிலைக்கு வருவது போல் தோன்றியது விவேக்கிற்கு.
அம்மாவின் மடியை விட்டு எழுந்தபோது ஏதோ ஒரு தியானத்திலிருந்து எழுந்தது போல் தெளிவான மனதுடன் எழுந்தான் விவேக்.
விவேக்கின் அறைக்குள் அவனை தவிர வேறு யாருமில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அர்ச்சனா.
நேரம் இரவு பத்தை தாண்டி இருந்தது.
அந்த நிமிடத்தில் அங்கிருந்த மேஜை மீதிருந்த மடிக்கணினியில் பதிந்திருந்த அவன் கண்கள் அதிலிருந்து விலகி, அவள் மீது பதிந்து, அவளை அங்கே எதிர்பார்த்திராத வியப்பில் சரேலென விரிந்தன.
'வாங்க மேடம். என்றான் விவேக் இதழ்களில் ஓடிய புன்னகையுடன்
அப்படி உட்காரலாமே என்று எதிரில் இருந்த கட்டிலை காட்டியவன் அவள் அமர்ந்ததும், நாற்காலியை அவள் பக்கமாய் திருப்பிப்போட்டுகொண்டு அமர்ந்தான்.
என்ன ஆச்சர்யம் என்னை தேடி வந்திருக்கீங்க.? ஏதாவது வரம் கேட்க போறீங்களா? என்றான் அர்த்தம் பொதிந்த பார்வையுடன். கேளுங்க மேடம் நீங்க என்ன கேட்டாலும் கொடுக்கிற மூடில் இருக்கேன். சிரித்தான் விவேக்
பதில் சொல்லாமல் தன் விரல்களை ஆராய்ந்துகொண்டு அமர்ந்திருந்தவளை சில நிமிடங்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான் விவேக்.
கேட்டு விடு பெண்ணே. வாய்திறந்து நீ விரும்புவதை கேட்டு விடு. நான் கொடுத்துவிடுகிறேன்.
அவள் மனம் எங்கோ சுற்றிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னால் இதே, இதே போன்றதொரு சூழ்நிலையில் வசந்தை சந்தித்த நிமிடம் நினைவிலாடியது.
சொல்லு அர்ச்சனா என்ன வேணும் உனக்கு?
யோசனையில் இருந்து மீண்டவள் 'ம்? இல்லை எனக்கு. என..க்கு உங்க வாட்ச் வேணும். என்றாள் சட்டென
என்னது? வாட்சா? புரியாமல் கேட்டான் விவேக்.
'ஆமாம். எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு எங்கப்பா பத்தி ஒரு கெட்ட கனவு. அதிலே இதே மாதிரி ஒரு வாட்ச் வந்தது. என்று கனவை அவனிடம் விவரித்தாள் அர்ச்சனா.
'எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆக கூடாது. எனக்காக நீங்க இந்த வாட்சை இனிமே கட்டிக்காதீங்களேன் ப்ளீஸ்'. பட பட வென பேசினாள் அர்ச்சனா.
சில நொடிகள் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
'என்ன பெண்ணிவள்? அப்பா என்ற ஒன்றை தவிர வேறெதுவுமே இல்லையா அவளுக்குள்ளே? எப்போதுமே அவரை பற்றிய கவலை தானா? ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம்
எத்தனை நாள் இப்படி சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாய் வாழ்வதாம்?. அப்பாவையும் தாண்டி அவளுக்கென்ற ஒரு தனிப்பட்ட வாழ்கை இருக்கிறது என்று அவள் புரிந்துக்கொள்ள வேண்டாமா? அப்பா சொல்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியாது, மனதை கொன்றுவிட்டு யாருடன் வேண்டுமானாலும் வாழ்ந்து விட முடியாது என்று அவள் உணர வேண்டாமா?
மனதிற்குள் ஏதோ ஒன்று ஓட, சில நொடிகள் யோசித்தவன், 'ஸோ. உங்கப்பாவோட உயிர் இந்த வாட்சிலேதான் இருக்குங்கிறே? சரி. நான் இந்த வாட்சை கட்டிக்காம இருக்கணும்னா நீ எனக்கு என்ன தருவே? என்றான்.
திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அர்ச்சனா.
ஏனோ அந்த நொடி அவள் மனதிற்குள் வசந்த் வந்து போனான். எனக்காக நீ இந்த வாட்சை கட்டிக்காம இருப்பியா வசந்த்?" அவள் கேட்ட அடுத்த நொடி வாட்ச் அவன் சட்டைப்பைக்குள் போய் விட்ட காட்சி கண்முன்னே வந்து போனது.
பதில் சொல்லு அர்ச்சனா எனக்கு என்ன தருவே?
தொடரும்
Manathile oru paattu episode # 19
Manathile oru paattu episode # 21
{kunena_discuss:683}