(Reading time: 8 - 15 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 01 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ஹேய் ஜானு.., ஏண்டி படுத்துற நீ ? இப்போதான் சீரகம்னு சொல்லி ஒரு போட்டோ அனுப்பின..அதை கண்டுபிடிச்சு முடிக்கிறதுக்குள்ள அதே போட்டோவை எடிட் பண்ணி சோம்புநு சொல்லுற ? " என்று அந்த சூப்பர் மார்கேட்டையே விலைக்கு வாங்கியவன் போல குரலை உயர்த்தி தோரணையுடன் தொலைபேசியில் வாதடிக்கொண்டிருந்தான் அவன்...... 

VEVNP

அவனின் குரலா ? அதில் தொனித்த எரிச்சலா ? அல்லது சீரகம் சோம்பு என வாதம் செய்த  அவன் பேச்சா ? ஏதோ ஒன்று அவளை ஈர்க்க அவன் புறம் திரும்பினாள் சுபத்ரா. அவன் குரலில் தெரிந்த எரிச்சல் அவன் முகத்தில் பிரதிபலிக்கவில்லையே என்று ஆச்சர்யபட்டவள், அவனருகில் பொருட்களை தேடி எடுப்பதுபோல் அவன் பேச்சினை கவனித்தாள் ....... எதிர்முனையில் பேசும் அந்த "ஜானு" வின் பதில் அறியாதவள் இவனின் வார்த்தைகளுக்கு மனதிற்குள் பதில் சொல்லவும்  மறக்கவில்லை.

" இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் டி"

( என்ன அநியாயமாம் )

" சீரகம் , சோம்பு ரெண்டுமே பார்க்க ஒரே மாதிரிதானே இருக்கு , எதாச்சும் ஒன்னு வாங்கினா பத்தாதா .......... ஒன்னும் தெரியாத குழந்தையை அத்தையும் மருமகளுமா சேர்ந்து என்னமா ஓட்டுறிங்க ? "

என அலுத்துகொண்டான் ....

 (என்ன  ஒன்னும் தெரியாத குழந்தையா ) என மனதிற்குள் வினவியவள் மிக பொறுமையாக அவனை கவனித்தாள். சுருள் கேசம், அழுத்தமும் குறும்பும் மின்னிடும் கண்கள், கர்ணனின் கவசகுண்டலம் போல எப்போதும் பிரியாமல் இருக்கும் இதழோர புன்னகை, அசர வைக்கும் உயரம் .................

 ( ச்ச்ச.... என்ன பழக்கம் இது ? முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை இப்படி பார்க்குறது ? இதுவே ஒரு பையன் நம்மளை இப்படி பார்த்திருந்தா இந்நேரம் அவனை நான் சும்மா விட்டுருப்பேனா? இப்போ நானே ஏன் ? ) என தன்னை தானே கடிந்து கொண்டவள்,

( அத்தை மருமகளா ? அப்போ இவன் கல்யாணம் ஆனவனா ? ) என்று தனக்குள்ளே வினவினாள். ஏனோ  அந்த சிந்தனை அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது.

" ஜானு என் தங்கம் லே, ப்ளீஸ் டா...அம்மாகிட்ட கோவிலுக்கு போறேன்னு சொல்லி இங்க வந்து என்னை காப்பத்துவியாம்.... எவ்ளோ நேரமா இங்கேயும் அங்கேயும் தேடி தேடி வாங்குறது ? இனி ஷாப்பிங்  பத்தி நான் ஒரு வார்த்தை கூட தப்ப பேச மாட்டேன் .... நீ எங்க கூடிட்டு போக சொன்னாலும் நானே டிரைவர் ..சரியா ? " என பேரம் பேசினான்.

( ஐயோ பாவம் ...எப்படி கெஞ்சுறான்.... ஜானு நீ கொடுத்து வெச்ச பொண்ணுமா ) என்று நினைத்தவளின் முகத்தில் சோகம் பரவியதன் காரணம் அவள் அறியாள்.

கைப்பேசியில் கவனம் செலுத்திய அவன் பின்னால் நின்றிருந்த சுபத்ராவின்மேல் மோத விழ போனவளை நொடி பொழுதில் கை பிடித்து நிறுத்தினான்.

" மன்னிச்சிருங்க... என் மேலதான் தப்பு கவனிக்காம இடிச்சுட்டேன் " என்றான்...

விழிகள் விரிய அவனை பார்த்தவள் வாய்  திறந்து பேசாதிருந்தாள்.. அவளுக்கு மட்டும் ஒரு இனிய பாடல் மனதில் ஒலித்தது. அவன் பேச பேச அவள் கற்பனையில் லயித்திருந்தாள்.

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே

கண்களை நேராய் பார்த்துதான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே

தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடலொன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்

மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்

மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்

உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்

" ஹலோ மேடம் .... ஆர் யு ஓகே ? தமிழ் தெரியுமா ? " என்று அவன் கொஞ்சம் குரல் உயர்த்தி அழைக்கவும் மனதிற்குள் தன்னை திட்டிக்கொண்டு மெல்ல புன்னகைத்தாள்.

" யா..ஐ  எம் பைன்..... "

"  அப்பாடா ...எங்க நான் மோதிய வேகத்துல நீங்க கோமா ஸ்டேஜ் போய்ட்டிங்களோ நு பயந்துட்டேன் " என்று தனக்கே உரிய குறும்புத்தனத்தில் பேச்சை ஆரம்பித்தான் அவன். அந்த பேச்சில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுபத்ரா , அவனுக்கு தான் சளைத்தவள் இல்லை என நிரூபித்தாள்.

" நீங்க உங்க ஜானுகிட்டே சீரகம் சோம்புனு வித்தியாசம் கேட்கும்போதே   மயக்கம் போடாம ஸ்ட்ராங்கா இருந்தேன் நான் " என இல்லாத கோலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.

" ஹேய் நாங்க பேசியது உங்களுக்கு எப்படி தெரியும்? "

" எப்படி தெரியுமா? சார் நீங்க பேசிய வேகத்துல பக்கத்துக்கு கடையில் இருக்குற அண்ணாச்சியே வந்து நின்னா கூட ஆச்சர்யபடுறதுக்கு இல்ல "

" அவ்வளோ சத்தமாவா கேக்குது ? " என வடிவேலு காமெடி போல பேசியவனை பார்த்து வாய் விட்டு சிரித்தாள் சுபத்ரா.

"  ஹ்ம்ம் எவ்வளோ இயல்பா சிரிக்கிறிங்க ...நான் கூட உங்க மேல மோதினதுக்காக நீங்க என்னை திட்டி தீர்க்க போறிங்கனு நெனச்சுட்டேன் "

" ஆஹா இது தெரிஞ்சிருந்த கொஞ்சம் சீன் போட்டுருப்பேனே "

" அட போங்கங்க உங்களை பார்த்தா அப்படிலாம் தெரியல "

" சரி உங்க ஜானுவுக்கு போன் போட்டு கொடுங்க "

" எதுக்கு " என்று வினவியவன் அவள் கேட்டதுபோல் போன் போட்டு கொடுக்க,

" ஷ்ஷ்ஷ் " என்றவள் ஜானுவிடம் பேசினாள்.

" ஹெலோ "

" ஹெலோ ஜானு "

" ஆமா நீங்க ? "

" நான் சுபத்ரா ..... உங்க கணவர் இங்க திங்க்ஸ் வாங்குறேன்னு ரொம்பே சிரமபடுறார் ...அதான் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணலாம் நு "

" கண........... ஓ............ மாமா நல்ல மாட்டிக்கிட்டாங்களா .....ஹா ஹா இட்ஸ் ஓகே சுபத்ரா உங்களுக்கு ஏன் சிரமம்? நாளைக்கு நானே வாங்கிக்குறேன்...... சும்மா மாமாவுக்கு சவால் விட்டோம் ..அதான் அவர் உடனே ஷாப்பிங் பண்றேன்னு நு சொல்லி அங்கே காமெடி பண்ணிட்டு இருக்கார் போல "

" அட இதுல என்ன இருக்கு ...நாங்க இங்க தானே இருக்கோம்? சொல்லுங்க ..நானே வாங்கி அனுப்புறேன் .................. ரொம்ப உரிமை எடுக்குறேன்னு நெனச்சா சொல்லிடுங்க ..நான் இயல்பாகவே இப்படிதான் ...." என்று திரு திருவென விழித்தபடி பேசிய சுபத்ராவை  ரசனையுடன் பார்த்தான் அவன்.

" ச்ச ச்ச அப்படியெல்லாம் இல்ல சுபா......எப்பவும் இப்படிதான் இயல்பாக இருக்கணும் "

இரு பெண்களும் பேச்சையும் முழுமையாக கேட்காவிடினும் சுபத்ராவின் முகபாவனையை பார்த்தப்படி அவளை புன்னகையுடன் பின்தொடர்ந்தான் அவன்.

" இந்தாங்க சார்...எல்லாம் எடுத்தாச்சு. கவுன்ட்டர் அங்க இருக்கு .... நான் வரவா இல்ல ஏதேனும் ஹெல்ப் வேணுமா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.