அப்படி இருந்தா எனக்கும் ரெண்டு குடுங்களேன். 'இல்லை'. 'ஆமான்னு' மெசேஜ் அனுப்ப வசதியா இருக்கும். கைகளை கட்டிக்கொண்டு ஊடுருவும் பார்வையுடன் அவள் கேட்க கொஞ்சம் தடுமாறிப்போய் சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் பரத்..
'இதையும் கண்டுபிடித்து விட்டாளா.? நிச்சியமாய் இவள் ராட்சஸியே தான்.'
சில நொடிகளில் சுதாரித்து வண்டியை நகர்த்த அவன் எத்தனிக்க ‘உண்மையை சொல்லுங்க நீங்க தானே மெசேஜ் அனுப்பினீங்க.? என்றாள் அபர்ணா.'
'நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியலை. இந்த விளையாட்டுக்கு நான் வரலே. நான் கிளம்பறேன்' அவன் அவளை தாண்டி நகரப்போனான்.
'என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கு அப்புறம் ஏன் என்னை விட்டு விலகி விலகி போறீங்க? என்றாள் அவனை வழிமறித்து.
'அதுதான் விலகிப்போறேன்னு தெரியுதில்ல அப்புறம் ஏன் என் பின்னாடியே வரே?' இது வயசு பசங்க படிக்கிற இடம். அவங்களுக்கு நாம தான் முன் உதாரணாமா இருக்கணும். யாரவது பார்த்தா நல்லா இருக்காது. முதல்ல வழியை விடு. சற்று அழுத்தமான குரலில் அவன் சொல்ல, சட்டென விலகியவளின் முகம் அப்படியே வாடிப்போனது.
அந்த முக வாட்டத்தில் கொஞ்சம் கலங்கித்தான் போனான் பரத். 'அய்யோ கண்ணம்மா கொஞ்சம் கடுமையாக பேசினாலே இப்படி வாடிப்போகிறதே உன் முகம். உன் மனதில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஒரு வேளை அது நிறைவேறாமல் போனால் தாங்குவாயா நீ?. மனதிற்குள் கேட்டான் அவன்.
என...க்கு எ...னக்கு நீங்க விலகிப்போறதுக்கு சரியான காரணம் சொ...சொ...ல்லுங்க அப்புறம் நான் வில...கிடறேன்.' குரல் தடுமாற சொன்னாள் அபர்ணா.
'இன்னொரு ஏமாற்றத்தையோ, அவமானத்தையோ சந்திக்கற தைரியம் எனக்கில்லை. அப்படி ஒரு வலியை உனக்கு கொடுக்கவும் நான் தயாரா இல்லை. அவ்வளவுதான். புரிஞ்சிக்கோ அபர்ணா' .
அவன் கண்களில் இருந்த தீவிரம் அவளுக்கு எதையோ உணர்த்தியது. முழுவதுமாக புரியாவிட்டாலும் அவன் காயப்பட்டிருப்பது மட்டும் புரிந்தது.
சில நொடிகள் கழித்து மெல்ல சொன்னாள். எந்த ஏமாற்றமும் வராது, என் மனசு சொல்லுது
'ஆண்டவா... பெரிய கணித பேராசிரியர் அவர். அவருக்கு 'இப்படி ஒரு லூசு பொண்ணா? , என்றவன் மனசு சொல்றதெல்லாம் நடக்காது அபர்ணா. தேவையில்லாம ஆசைகளை வளர்த்துக்காதே' அவள் முகத்தை பார்த்து நிதானமாக சொன்னான்.
'நடக்கும். என் மனசிலே இருக்கறது உண்மையான நேசம். அதுவே என்னை உங்களோட சேர்த்து வைக்கும்.' அவள் முகத்தில் தேங்கியிருந்த தவிப்பில் கொஞ்சம் கரைந்தவனாய் சிரித்தான் பரத்.
அப்படியா? இந்த மாதிரி டயலாக்லேயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சரி பார்க்கலாம். இன்னைக்கு ராத்திரி ஒன்பது மணிக்குள்ளே உன் மனசோ, இல்லை அதுக்குள்ளே இருக்கிற ஏதோ ஒண்ணோ என் முன்னாடி உன்னை கொண்டு வந்து நிறுத்தட்டும்.......
நிறுத்திட்டா....?
நிறு....த்தி....ட்டா.... கொஞ்சம் தடுமாறியவன், சுதாரித்து சொன்னான் 'நிறுத்திட்டா நான் ஒத்துக்கறேன். என் மனசிலே இருக்கறது எல்லாத்தையும் மனப்பூர்வமா ஒத்துக்கறேன்.'
இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
'அப்படி எதுவும் நடக்கலைனா நீ நினைக்கறதெல்லாம் எல்லாம் பைத்தியகாரத்தனம்னு ஒத்துக்கணும். எல்லாத்தையும் மறந்திடணும். எல்லாத்தையும் மறந்திட்டு வேறே ஏதாவது உருப்படியான வேலை பார்க்கணும். சம்மதமா?'
பதில் சொல்லவில்லை அபர்ணா.
பதில் சொல்லு அபர்ணா 'சம்மதமா.'?
மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்க அழுத்தமாய் சொன்னாள் 'சம்மதம்.'
'தேங்க்யூ.!' வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டிருந்தான் பரத்.
அவனுக்குள்ளும் ஏதோ ஒரு நம்பிக்கை. அவளால் அவன் முகவரியை கண்டுபிடிக்க முடியாது என்ற நம்பிக்கை. கல்லூரி அலுவலகமும் மூடியாகி விட்டது. அங்கிருந்து முகவரியை பெறுவதும் இயலாது. அவனுடன் வேலைப்பார்க்கும் யாருக்கும் அவன் முகவரி தெரியாது..
வானத்தில் மழை மேகங்கள் கூடி இங்கே நடந்தவைகளை பார்த்துக்கொண்டிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை.
மனதின் ஓரத்தில் இருந்த அந்த நம்பிக்கையை தவிர வேறெதுவுமே தோன்றவில்லை அபர்ணாவுக்கு.
ஒன்பது மணிக்குள் அவன் முன்னால் எப்படி சென்று நிற்பது? புரியவில்லை அவளுக்கு.
வண்டியை கிளப்பிக்கொண்டு நகர்ந்தாள்.
தினமும் பெசன்ட் நகர் கடற்கரையில்தானே அவன் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அப்படி என்றால் அவன் வீடு அங்கே தானே இருக்க வேண்டும்!.
பெசன்ட் நகரை நோக்கி வண்டியை செலுத்தினாள். பெசன்ட் நகர் வந்தாகி விட்டது. அதன் பிறகு.... பல ஆயிரம் வீடுகள் அங்கே. இதில் எது அவனுடையதாம்?
அவளிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டான்தான். ஆனால் அவன் மனம் அவனை உறுத்த துவங்கியது. வாடிப்போன அவள் முகமே அவன் நினைவில் நின்றது.
இவள் இலக்கிலாமல் சுற்றிக்கொண்டிருக்க கண்ணில் தென்பட்டாள் அவளது கல்லூரி கால தோழி ஸ்வர்ணா. அவள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க இவள் மனம் சுழன்றுகொண்டே இருந்தது
'வீட்டுக்கு வாயேன் அபர்ணா. பக்கத்திலேதான் என் வீடு.'
ம். சரி வரேன்' எதையோ யோசித்தபடியே அவளுடன் கிளம்பினாள் அபர்ணா.
தோழியுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினாள் அபர்ணா. மழை இருட்டிக்கொண்டு, கொட்டிவிட தாயராக காத்திருந்தது.
அவள் வண்டி நகர்ந்துக்கொண்டிருக்க, மனம் அதன் போக்கில் போய்க்கொண்டிருந்தது. என் மனதில் உள்ள நேசம் நிஜம். அது என்னை அவனுடன் சேர்த்து வைக்காதா? மனமே என்னை ஏமாற்றி விடுவாயா? என்னை அவன் இருக்கும் இடத்துக்கு அழைத்துப்போ.
நேரம் ஆறரையை தாண்டிக்கொண்டிருந்தது. தனது வீட்டில் இருந்த பரத்தின் மனமும் தவிக்க துவங்கியது.. கொஞ்சமும் யோசிக்காமல் எதை எதையோ சொல்லி விட்டேனே. என்னை தேடி தெருவில் சுற்றிக்கொண்டிருப்பாளோ என் ராட்சஸி.? மழை வேறு இருட்டிக்கொண்டு வருகிறதே!!!.
அவளை பற்றி தெரியும் அவனுக்கு. கண்டிப்பாக அவள் அவன் வீட்டை தேடி அலைந்துக்கொண்டிருப்பாள் என்றே தோன்றியது. என்னை காதலித்த பாவத்திற்காக அவளை இவ்வளவு அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம்.?
ஜீவன் அங்கே என்னை தேடும்.....
காணாமல் கண்கள் நோகின்றதோ......
எப்போதோ கேட்ட பாடல் நினைவுக்கு வந்தது.
நான் எங்காவது தென்பட்டுவிட மாட்டேனா என தவித்துக்கொண்டிருக்குமோ அவள் கண்கள்?
அவளை அழைத்து இங்கேதான் இருக்கிறேன் வா என்று சொல்லிவிடலாமா? அதன் பின் நடப்பது நடக்கட்டும்.
மழை லேசாக தூற துவங்கியது. சுள்ளென கோபம் வந்தது அபர்ணாவுக்கு. 'என்ன வேண்டுமாம் இந்த மழைக்கு? தினம் தினம் வந்து என்னை தொந்தரவு செய்துக்கொண்டு. நான் நனைய மாட்டேன் என்றால் நனைய மாட்டேன்.'
பெரிதாய் ஒரு இடி சத்தம் கேட்டது பரத்துக்கு. அவ்வளவுதான். அறிவு யோசித்து அவன் கைகளுக்கு ஆணை பிறப்பிப்பதற்குள், மனதின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவன் விரல்கள் அவனது கைப்பேசியில் அவள் எண்ணை அழுத்தி விட்டிருந்தன.
சில நிமிடங்கள் முன்பாகவே சார்ஜ் இல்லாமல் உறங்கி விட்டிருந்தது அவள் கைப்பேசி. அவனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை
.நான்கு முறை, ஐந்து முறை திரும்ப திரும்ப அவளை அழைத்துக்கொண்டிருந்தான் பரத். இணைப்பு கிடைக்கவில்லை..
எங்கே இருக்கே கண்ணம்மா? என்கிட்டே வந்திடேன். அவனே அறியாமல் அவன் உதடுகள் உச்சரிக்க கைப்பேசியில் மறுபடி மறுபடி முயன்றபடியே வாசலுக்கு வந்தான் பரத்.
வண்டியை செலுத்திக்கொண்டிருந்தாள் அபர்ணா. தூறல் வேகமாகி, மழை வலுத்தது. 'இல்லை நான் நனைவதாக இல்லை.!!!! என்றாள் அவள்
அருகே இருந்த அந்த வீட்டின் வாசலில் தனது வண்டியை நிறுத்திவிட்டு, மழையில் நனையாமல் ஒதுங்குவதற்காக, அந்த வீட்டின் கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே ஓடினாள் அபர்ணா.!!!!!!!
தொடரும்...
{kunena_discuss:726}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.