'அய்யய்யோ.!!!!! நான் யார் கையையும் பிடிச்சதில்லை. நிஜம்மா....' விட்டாள் அழுதுவிடுவாள் போல் இருந்தது.
அம்மாடி! இந்த மாதங்கி பாப்பா அழுதிடும் போலிருக்கே. தயவுசெய்து அழுதிடாதம்மா. அப்புறம் அவன் என்னை கொன்னுடுவான் என்று சிரித்தாள் கவிதா.
தனது கைப்பையில் இருந்த மொபைலையும், சார்ஜரையும் எடுத்து அவளிடம் நீட்டினாள் கவிதா. இதை நீ வெச்சுக்கோ. அவன் ராத்திரி உன்கிட்டே பேசுவான்.
நாங்க எல்லாரும் சென்னையிலே இருக்கோம் இவங்க அண்ணன், தம்பி ரெண்டு பேர்தான். அப்பா அம்மா கிடையாது. தாத்தா, பாட்டிதான் இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் நிச்சயதார்த்தத்துக்கு வருவாங்க. இன்னும் ஒரு வாரத்திலே நிச்சயதார்த்தம். சரியா?
கவிதாவையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த மாதங்கியின் கையை ஆதரவாக பற்றி அழுத்தினாள் கவிதா 'எல்லாம் நல்ல படியா நடக்கும் தைரியமா இரு.'
மெல்ல தலையசைத்தவள், கையிலிருந்த குழந்தையை முத்தமிட்டு கவிதாவின் கையில் கொடுத்தாள்.
அவர்கள் விடைப்பெற்று சென்ற பிறகு, மாதங்கி வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. அவளது அக்கா இருவரும் அவளிடம் எதுவுமே பேசவில்லை. அவர்கள் மனம் மட்டும் புகைந்துக்கொண்டே இருந்தது.
வழக்கம் போல் எல்லா வேலைகளையும் முடித்தாள் மாதங்கி.
இரவு மணி ஒன்பது. தனது அறைக்குள் இருந்தாள் மாதங்கி. ஒலித்தது கவிதா தந்த கைப்பேசி. கையிலேயே இருந்ததால் சட்டென எடுத்து விட்டாள் மாதங்கி.
ஹலோ.... என்றாள் மென் குரலில்.
'டா......ர்......லிங்...' என்றது மறுமுனை. அந்த குரலில் சில்லென்று சிலிர்த்து போனாள் மாதங்கி.
சாப்பிட்டியாடா? மென்மையான குரலில் கேட்டான் அவன். அப்படியெல்லாம் அவளை யாரவது கேட்டே வெகுநாள் ஆகிறது. அப்படியே மௌனமானாள் அவள். மனம் நிறைந்தது போலே இருக்க, சின்ன புன்னகை எழுந்தது அவள் இதழ்களில்.
என்னமா சைலென்ட்டாயிட்டே? சாப்பிட்டியா? இல்லையா?
ம். சாப்பிட்டேன் என்றவள் நீங்க யாரு? என்றாள் கொஞ்சம் மெதுவான குரலில்.
இங்கே. பாருடா! என்றான் அவன். அன்னைக்கு கையை பிடிச்சிட்டு அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தோம். இப்போ யாருன்னு கேட்குதே இந்த பொண்ணு. இது நியாயமா ஆண்டவா?
அய்யோ! எல்லாரும் அதையே சொல்றீங்க. நான் யார் கையையும் பிடிச்சதில்லை. நிஜம்மா...
நீ பிடிச்சதில்லை டார்லிங். ஆனா நான் பிடிச்சேனே....
எப்போ?
அன்னைக்கு ஒரு நாள்...... ராத்திரி....... சிரித்தான் அவன்.
ப்ளீஸ் நிஜமா சொல்லுங்க. நீங்க யாருன்னு.....
நிஜமாதான் சொல்றேன். நான் உன் கையை பிடிச்சவன். நான் யாருன்னு கண்டுபிடி. நம்ம நிச்சியதார்த்ததுக்குள்ளே கண்டுபிடி.
ப்ளீஸ் சொல்லுங்க...
சரி ரொம்ப கெஞ்சுறே. உனக்கு ஒரே ஒரு சான்ஸ் தரேன். இப்போ இந்த நிமிஷம் நான் சொல்ற இடத்துக்கு நீ வரியா? எனக்கும் உன்னை பார்க்கணும் போலே இருக்குடா. அவன் குரலும் அதில் இருந்த வாஞ்சையும் அவளை எதோ செய்தது.
எங்கே வரணும்? சட்டென கேட்டாள் அவள்.
உங்க வீட்டு பின்னாடி ஒரு ரயில் தண்டவாளம் இருக்கில்லே, அதை தாண்டி கொஞ்ச தூரத்திலே ஒரு கிணறு இருக்கில்லே அது மேலேதான் நான் உட்கார்ந்து இருப்பேன். வரியா?
அந்த கிணறா? ஏனோ அவளுக்குள்ளே திடுக்கென்றது. அந்த கிணற்றை பற்றிய எண்ணமே அவளை எங்கோ அழைத்து சென்றது. . 'அ..து அது.... வேண்டாமே.' என்றாள் இறங்கிப்போன குரலில்.
ஏன்?
அது... அது வந்து.....அதுக்குள்ளே பேய் இருக்கு. அது பேய் கிணறு.
ஓ! வெரி நைஸ் என்றான் அவன். நல்லதுதானே. பேயை நமக்கு காவலா நிக்க வெச்சிட்டு நாம ஜாலியா பேசலாம். அந்த இடத்துக்கு வேற யாரும் வர மாட்டங்க.
ப்ளீஸ் வேண்டாம்... அந்த கிணத்து பக்கம் நான் போக மாட்டேன்....
சரி உனக்கு பயமா இருந்தா வேண்டாம் விடு. நாளைக்கு எப்போவாவது பகல் நேரத்திலே மீட் பண்ணலாம்..
பகல் நேரத்திலே நான் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாதே.
அதைக்கேட்டவுடன் ஏனோ அவன் மனம் ரொம்பவே வலித்தது. சரி விடு டார்லிங் நாம நிச்சியதார்த்ததிலே மீட் பண்ணலாம். ஆனா அதுக்குள்ளே நான் யாருன்னு யோசிச்சு நீ கண்டு பிடிச்சிடணும். அப்படி கண்டு பிடிக்கலைன்னு வெச்சுக்கோ...
கண்டு பிடிக்கலைன்னா?
என்ன செய்யணும்னு அப்போ சொல்றேன். இப்போ வெச்சிடட்டுமா. ரெஸ்ட் எடு சரியா?
ம்....
'குட். நைட் டார்லிங்.' அழைப்பை துண்டித்தவனுக்கு ஏனோ அவள் வருவாளோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. தேவை இல்லாமல் அவளை வரச்சொல்லி விட்டேனோ? ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்வாளோ?
எவ்வளவு சமாதான படுத்தியும் மனம் கேட்க வில்லை. அவளுக்கு. 'எனக்கும் உன்னை பார்க்கணும் போலே இருக்குடா' சொன்னானே அவன்.
பத்து பதினைந்து நிமிட யோசனைக்கு பிறகு அவனை ஒரே ஒரு முறை பார்த்துவிடும் எண்ணத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு இறங்கினாள் மாதங்கி.
அவன் அங்கேயே தான் இருப்பானா? அதுவும் தெரியவில்லை அவளுக்கு. ஏதோ ஒரு நம்பிக்கையில் நடந்தாள் அவள்.
நேரம் ஒன்பதரையை தாண்டி இருந்தது தெரு விளக்குகள் என்று அதிகம் கிடையாது அவள் ஊரில்.
கையில் இருந்த டார்ச் லைட்டின் உதவியுடன் தெருவில் நடந்தாள் அவள். ஏதோ பலநாட்கள் பழகிய பந்தம் போல் ஏன் அவன் குரல் என்னை ஈர்க்கிறது? ஏன் நான் அவனை தேடிப்போகிறேன்? அவளுக்கே புரியவில்லை.
தெருவில் நடமாட்டமே இல்லை. அடி வயற்றில் ஏதோ ஒரு பயம் பிறந்தது. அதையும் மீறி அவள் கால்கள் நடந்தன.
அவள் நடக்க, நடக்க, அந்த கிணற்றுக்குள் ஏதோ ஒன்று துடிக்க துவங்கியது. அவள் தன்னை நோக்கி வருகிறாள் என்று புரிந்தது போலே கிணற்றுக்குள்ளே இங்குமங்கும் அலைப்பாய்ந்தது அது.
மூச்சை கெட்டியாய் பிடித்துக்கொண்டு நடந்தாள், மனதை அழுத்திய பயத்தையும் மீறி அவள் காதல் அவளை செலுத்த நடந்தாள் மாதங்கி.. அவள் கொலுசொலியே எங்கும் எதிரொலிப்பது போலே தோன்றியது அவளுக்கு.
சில அடிகள் முன்னால் எடுத்து வைத்து அந்த தண்டவாளத்தை நெருங்கிய போது இருட்டில் அவள் பின்னால் யாரோ வருவது போலே உணர்ந்தாள் மாதங்கி..
அவள் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது. காற்றில் இதுவரை அவள் உணர்ந்திராத ஒரு வாசம் காற்றில் கலந்து அவள் நாசியை வருடியது.
தொடரும்...
{kunena_discuss:781}