கௌரி கல்யாண வைபோகமே – 02 - ஜெய்
“உன் பொண்ணு தலைலேர்ந்து கால் வரைக்கும் இழுத்துப் போர்த்தி மூடிண்டு கனவு கண்டுண்டு இருப்பா, இரு போய் எழுப்பறேன்”
“நீ இருடா, நானே போறேன், இப்ப அவ எழுந்துக்கலை, இன்னைக்கு காலங்கார்த்தால அவளுக்கு அபிஷேகம்தான்”
“கௌரி, கௌரி எழுந்திரிடி, மணி 7.30 ஆறது, இன்னுமா தூக்கம், அப்பா வாக்கிங் போயிட்டு வந்தாச்சு, ஹரி யோகா முடிச்சு கஞ்சி குடிச்சு முடிச்சாச்சு, உனக்கு இன்னும் சுப்ரபாதமே ஆகலை, இப்படி இருந்தே போற இடத்துல விடிஞ்சுடும்., உனக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் டைம், அதுக்குள்ள வரலை அப்புறம் பக்கெட் தண்ணிதான் வரும் சொல்லிட்டேன்”, ஹரி சொன்னமாதிரியே போர்த்தி மூடி தூங்கிய பெண்ணைப் பார்த்த டென்ஷன் ஏற கத்த ஆரம்பித்தாள் ஜானகி.
“ஏம்மா இப்படி ஒரு வளர்ற பொண்ணைப் படுத்தற, எம் எஸ்ஸ இன்னொரு வாட்டி சுப்ரபாதம் பாட சொன்னா பாட மாட்டாளா, பாரு டென்ஷன்னான நேரத்துல எழுப்பிட்டே”
“ஏண்டி, சுப்ரபதமா இப்போ முக்கியம், காலங்கார்த்தால எழுந்துண்டு எனக்கு கூட மாட கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோமேன்னு இருக்கா? அதெல்லாம் கிடையாது, அப்படி என்னடி தூக்கத்துல உனக்கு டென்ஷன்”
“ஆஸ்திரேலியால Finals விளையாடிண்டு இருக்கேன், ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எழுப்பி இருந்தேன்னா நான் இந்தியாக்கு வேர்ல்ட் கப் வின் பண்ணிக் கொடுத்தேனா இல்லையான்னு தெரிஞ்சுருக்கும், போம்மா நீ”
“யாரு நீ, இந்தியாக்கு கப் வாங்கிக் கொடுக்கப் போறே, ஸ்கூல்ல வச்ச லெமன் அண்ட் ஸ்பூன்ல வின் பண்ணி ஒரு ஸ்பூனைக் கூட உன்னால வாங்க முடியல, நீதான் வேர்ல்ட் கப் வாங்க போறே”, ஹரி நக்கலடித்தான்.
“வேணாம்டா ஹரி, வீணா காலங்கார்த்தால வம்புக்கு இழுக்காதே சொல்லிட்டேன்”
“என்னடி வேணாம், உன்னை மாதிரிதானே அவனையும் பெத்தேன், அவன் பாரு கார்த்தால எழுந்து யோகா முடிச்சு குளிச்சு சந்தி பண்ணி எப்படி இருக்கான், நீயும் இருக்கியே”
“அம்மா அவனும் நானும் ஒண்ணா, அவன் ஆதி சங்கரர், ரமணர், விவேகானந்தர் இவா வழில வந்தவன், அதுனால அப்படி இருக்கான், நான் அப்படி இருந்தேன்னு வைய்யி உலகம் அழிஞ்சுடாது”
“சனியனே, உன் வாய்ல நல்லதே வராதா, கல்யாணம் பண்ணிக்காம சன்யாசம் வாய்ண்டவா பேரா சொல்றயே, வேற யாருமே உனக்கு கம்ப்பார் பண்ண கிடைக்கலையா? எழுந்துப்போம், அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவோம்ன்னு கிடையாது, நன்னா வாய் மட்டும் பேசு”
“ஏம்மா உனக்கு என்ன ஹெல்ப் பண்ணனும், உன்னோட அருமை ஆத்துக்காரர் வாக்கிங் முடிச்சுட்டு வரும்போதே காய்கறி வாங்கிண்டு வந்துடறார், அப்புறம் உன்னோட சத்புத்திரன் உனக்கு அதை நறுக்கி தந்துடறான், நீயே ஏத்தி இறக்கற வேலைதான் பார்க்கறே, இதுக்கு நான் வேறயா”
“பாருடா ஹரி, என்னைக்கோ ஒரு நாளைக்கு நீ காய் நறுக்கினதை என்னமோ தினம் பண்ற மாதிரி சொல்றா பாரு, நீ எல்லாம் மாமியார்கிட்ட போய் இடி வாங்கினாதான் திருந்துவே, சரி சரி சீக்கிரம் போய் குளிச்சுட்டு வேலை இருந்தா முடி, அப்பா ஏதோ முக்கியமா எல்லாரோடவும் பேசணும்ன்னு சொல்லி இருக்கார், அதுன்னால உன் வேலை எதுவா இருந்தாலும் ஒரு மணிக்குள்ள முடிச்சுடு, சரியா”
“ஏம்மா இப்போ மீட்டிங் போட்டு பேசற அளவுக்கு என்ன நடக்க போறது, ஆனாலும் Mr.ராமனை சில சமயத்துல புரிஞ்சுக்கவே முடியலை”
“அதுதாண்டி எனக்கும் கார்த்தால உங்க அப்பா பேசணும்ன்னு சொன்னதுலேர்ந்து என்னவா இருக்கும்ன்னு ஒரே மண்டை குடைச்சலா இருக்கு, சரி சரி சீக்கிரம் போய் உன் வேலையை முடி நானும் சமையலை கவனிக்கிறேன்”
கௌரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலை விசில் அடித்து கொண்டே குளிக்க சென்றாள்.
“நான் வந்தேன் விளக்குமாறு பிஞ்சுடும், whistle அடிக்கறதை நிறுத்திட்டு குளிக்கப் போ” டென்ஷன் ஆகி ஜானகி கத்த ஆரம்பிக்க கௌரி ஓட்டம் எடுக்க வீடு கொஞ்ச நேரம் ரணகளமானது.
இதுதான் ஹரியின் குடும்பம். அம்மா ஜானகி ஹவுஸ் வைஃப். அப்பா ராமநாதன் ஒரு பிரைவேட் கம்பனியில் கணக்கராக உள்ளார். முக்கியமான ஆள் நம்ம ஹரியின் அக்கா கௌரி. இன்ஜினியரிங் முடித்துவிட்டு HCL-யில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்கிறாள். Middle class family, கைக்கும் வாய்க்கும் இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று இல்லை என்றாலும், அளவான வருமானம்தான். ராமன் தன் குழந்தைகளுக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்து அவர்களின் படிப்புதான். இருவருமே மிகச்சிறந்த மாணவர்கள்.
பிற்பகல் 2 மணி
“ஏன்னா இப்போவானும் அந்த தங்க மலை ரகசியத்தை சொல்லுங்கோளேன், கார்தலேர்ந்து யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சு போய் இருக்கேன்”, ஜானகி என்னவாக இருக்குமோ என்ற தவிப்புடன் வந்து அமர்ந்தார்.
“எல்லாம் நம்ம கௌரி பத்தித்தான்”
“ஏம்ப்பா நான் என்ன பண்ணினேன். கார்த்தாலேர்ந்து அம்மாவைக்கூட ஒரு வாட்டிதானே டென்ஷன் பண்ணினேன். மத்தபடி நான் உண்டு என் வேலை உண்டுன்னுதானே இருந்தேன்”
ஜானகி கடுப்பாகி “என்னது உன் வேலை உண்டுன்னு இருந்தியா, அப்படி என்னடி வேலை செஞ்ச”
ராமனும் இவ வேலை செஞ்சாளா நான் பார்க்கவே இல்லையே, என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு “கௌரி அம்மா கேக்கறா இல்லை சொல்லு அப்படி என்ன செஞ்சேன்னு”